செவ்வாய், 2 ஜூன், 2015

டாக்டர் ஜேபி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி



2/6/2015 செவ்வாய், ஜேபி என அனைவராலும் நட்புடன் அழைக்கப்பட்ட கடாரப் பேரறிஞர் டாக்டர்.எஸ்.ஜெயபாரதி அவர்கள் இன்று காலை தமது 74ம் அகவையில் இறைவனடி எய்தினார். இச்செய்தியை ஜேபி அவர்களின் புதல்வி பைரவி ஜேபியின் தமிழ், ஆங்கில முகநூல்கள் வ‌ழி தெரியப்படுத்தியிருந்தார்.

டாக்டர் ஜேபி சின்னமுத்து பிள்ளை அவர்களுக்கும் அழகுரெத்தினம் அம்மாளுக்கும் 1941 ஆம் ஆண்டு பிற‌ந்தார். இவர் தந்தையார் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, நேதாஜி சுபாக்ஷ் சந்திரபோஸ் அவர்களுக்கும் அறிமுகமானவர் என அறியப்படுகிறது.

திருமதி சந்திராவை வாழ்க்கைத் துணைவியாகக் கொன்ட ஜேபி அவர்களுக்கு சுகானந்த பாரதி எனும் புதல்வரும் அழகுரெத்தினம் பைரவி எனும் புதல்வியும் உள்ளனர்.

மருத்துவத்துறையில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜேபி சுங்கைப்பட்டாணி பொது மருத்துவமனையில் இயக்குனராக பணியாற்றிவர். தமிழ் இலக்கியங்கள், தமிழினத்தின் பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொன்ட சிறந்த வரலாற்று ஆசிரியரும், தேர்ந்த பேச்சாளருமாவார்.

சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி என பெருமையுடன் அழைக்கப்பட்டவர் ஜேபி. தமிழ் இலக்கியங்கள், தமிழர்களின் தொன்மையான இனம், மதம், கலாச்சாரம், பாரம்பரியம் வானவியல் சாஸ்திரம் சார்ந்த அவரின் ஆய்வுகளும் அதன் முடிவுகளும்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் இவை குறித்த பல்வேறு கட்டுரைகளை மலேசியப் பத்திரிக்கைகளில் எழுதி வந்துள்ளார். (ஆதாரம் : ஜேபி அவர்களின் பதிவுகள்)


பன்முகத்திறனாளர் எனவும் நடமாடும் பல்கலைக்கழகம் எனவும் வர்ணிக்கப்படும் கல்விமானாகிய ஜேபி அவர்கள் ஆழ்ந்த வாசிப்பாளருமாவார். இவரின் சேமிப்பில் பல்துறை சார்ந்த 5000 புத்தகங்கள் வரை வைத்திருந்தவர். அவற்றுள் மிகவும் அரிய புத்தகங்களும் அடங்கும்

DrJaya Barathiஇணையத்தளங்களில் ஜேபி அவர்களின் ஆளுமை மிகப்பெரிது. கீழ்க்காணும் வலைத்தளங்கள், மடலாடல் குழுக்கள் வழி 9000 வரை கலை, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், மதம், வேதம், ஆகமம் குறித்த தமது ஆய்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்திருக்கிறார். கலை, இசை ஆகிய துறைகளிலும் அபார ஆர்வம் வாய்ந்தவர் ஜேபி.


இவர் பண்டைய மலாய் நாகரீகத்தின் ஆய்வுக்கும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் என அறியப்படுகிற‌து.  இதன்வழி உலகோர் அறிந்திரா மிக மிக நுட்பமான, பயன்வாய்ந்த தகவல்களையும் மக்களிடம் பகிர்ந்துள்ளார். மக்கள் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் மிகப்பெரிய கல்விக் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் ஜேபி.

கீழ்க்காணும் அவருடைய பதிவுகள் அவர் உலகுக்கு விட்டுச்சென்ற கல்விப் பெட்டகங்களாகும்.

http://groups.yahoo.com/group/agathiyar/
http://www.treasurehouseofagathiyar.net/
http://www.visvacomplex.com/
http://www.skandaweb.com/
http://jaybeestrishul11.blogspot.com/
http://jaybeesmuseumtamil.blogspot.com/
http://jaybeetrident.blogspot.com/
http://jaybeemuseum-e.blogspot.com/
http://jaybeesnotebook.blogspot.com/
http://jaybeeskadaram.blogspot.com/
http://kadaaramweb.blogspot.com/
http://www.chandraweb.net

இவரைப்பற்றி எழுதுவதற்கு இன்னும் நிறையவே உள்ளன. சமயம் வாய்த்தால் இன்னும் நிறைய எழுதும் எண்ணம் உண்டு, ஒரு நல்ல நண்பராகவும் ஆசானாகவும் எனது முதல் மரியாதைக்கு உரியவர் டாக்டர் ஜேபி அவர்கள். ஒரு ஆசானின் நிலையிலிருந்து ஜேபி போதித்தது அதிகம். இவரிடம் ஒருங்கே பாராட்டும் திட்டும் பெற்றது எனது பாக்கியமே.

Jay Beeவாழும் காலத்தில் இந்த மாமேதை தாம் அடையவேண்டிய அங்கீகாரங்களை அடையவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறிய விடயமே, அஞ்ஞான மாயையகற்றி, ஞானஒளி பரப்பிய அறிவொளி ஆசானாகிய இவர் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. அன்னாரை இழந்து துயரும் குடும்பத்தினர்க்கும், அவரின் ஆயிரமாயிரம் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


ஆக்கம்
சிவனேசு,
2/6/2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக