புதன், 21 அக்டோபர், 2015

ஆண்பாவம் (நிறைவு)

வருடங்கள் உருண்டோடின, எங்களின் இனிய வாழ்விற்கு அடையாள‌மாய் ஒன்றன் பின் ஒன்றாய் 6 குழந்தைகள் பிறந்தனர். திருமணமானது முதல் ரேவதியை வேலைக்கு அனுப்பாது வீட்டிலேயே வைத்திருந்தேன். அவள் மனம் மகிழ அவள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிவைத்தேன். கிடைக்கும் சம்பள‌த்தை என் அவசிய தேவைகளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதப்பணம் அத்தனையும் அவள் கையில் கொடுத்துவிடுவேன். குடும்பம் பெருகிய பின் தேவைகள் அதிகரித்து வருமானப் பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது. இரவு பகல் சளைக்காது வேலை செய்தும் வீட்டுச் செலவுகளில் துண்டு விழுந்தது.

ரேவதி இதை சாக்காய் வைத்து அதிகம் சம்பாதிக்க அயலூருக்கு செல்லலாம் என நச்சரித்து, கெடாவிலிருந்த என்னை மலாக்காவிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே அவளின் நெருங்கிய உற‌வினர்கள் பலர் வாழ்ந்துவந்தனர். என் உறவுகளிடமிருந்து பிரிந்த‌து எனக்கு வருத்தமே. என்ன செய்வது, வாழ்வைத் தொடரவேண்டுமே, அதற்கு அதிகப் பணம் மிக முக்கியமல்லவா ?

நிறைய முயற்சிகளுக்குப்பின் ஒரு பெரிய தொழிற்சாலையில் அனுபவத்தை முன்வைத்து நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. குடும்பத்தைக் கரையேற்ற அல்லும் பகலும் அயராது உழைக்க ஆரம்பித்தேன்.

குடும்பத்துடன் செலவிடும் நேரம் சொற்பமானது, வேலை மட்டுமே என் கவனமானது, கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்தேன். கை நிறைய சம்பளத்தை ரேவதியின் கையில்  கொடுத்து அவள் முகம் மலரும் அழகைக் கண்டு மகிழ்வேன். எல்லாப் பொறுப்புகளையும் அவளே முன்வந்து கவனிக்க, கவலையற்று வேலையில் முழுக்கவனம் செலுத்தினேன். என் உடல் சோர்ந்து, அலுப்படையும் நேரங்களில், ரேவதி நாம் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து வைத்திருப்பாள். கூடிய விரைவில் அந்தப் பண‌த்தைக்கொன்டு ஒரு சிறு வியாபாரம் துவங்கி, செளகரியமாக தொழில் செய்ய வேண்டும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என மனக்கோட்டைகள் கட்டியவாரே வேலை செய்வேன். மனம் உற்சாகமடைய அலுப்பும் போன இடம் தெரியாது.

என் மூத்த குழந்தைகளுக்கு பதின்ம வயதானது. இடிவிழுந்தாற்போல என் தொழிற்சாலை திடீர் நக்ஷ்டத்தில் மூடப்பட்டது. நிலைகுலைந்துபோனேன் நான். இருப்பினும் மனைவியின் சேமிப்பில் இருக்கும் பணத்தைக் கொன்டு நாம் விரும்பிய வியாபாரம் துவங்கலாம் எனும் எண்ணத்துடன் வீடு திரும்பி ரேவதியிடம் நடந்ததைக் கூறினேன். கலங்கிய எனக்கு ஆறுதல் கூறி அரவணைப்பாள் என ஓடோடி வந்த என்னை நான் நிலை குலையும் வண்ணம் கோப முகங்காட்டி ஆத்திரத்துடன் பேசினாள். அவள் நடவடிக்கை எனக்கு ஆச்சரியத்தைத் தர, என் சம்பளப்பணத்தில் சேமிப்பைப்பற்றி அவளிடம் வினவ ஆரம்பித்தேன். அதற்கு அவள் கூறிய பதில் எனக்கு ஆயிரம் இடிகள் என் தலையில் ஒரே சமயத்தில் இற‌ங்கிய வேதனையைத் தந்தது. கொஞ்சமும் சேமிக்காமல் ஊதாரியாய் எல்லாப் பண‌த்தையும் செலவழித்தும் தன் உறவுகளுக்கு தாரை வார்த்தும் முடித்துவிட்டாள் என் மனைவி. இவை யாவும் என் கவனத்திற்கு வராமல் அத்தனை சாமர்த்தியமாய் செயல்பட்டிருக்கிறாள் என் அருமை மனைவி.
ஆத்திரத்தில் கண்மறைக்க முதல் முதலாய் அவளுக்கும் எனக்கும் ஆரம்பித்தது சண்டை. அன்று ஆரம்பித்தது எனக்கு கலிகாலம். அநாகரீகமாய் சத்தமிட்டு சண்டையிடத்துவங்கிய என் மனைவி சத்தம் கேட்டு விழித்த குழந்தைகளைக் கண்டதும் அழுது புலம்பி மாய்மாலம் செய்யத் துவங்கினாள். என் குழந்தைகள் திகைப்புடன் எங்களை நோக்கினர். ரேவதியின் கொடூரமான மறுபக்கம் ஆரம்பமானது....

என் வாழ்வின் வேதனையான காலக்கட்டம் ஆரம்பித்துவிட்டது என்பதை உண‌ர்ந்தேன். பல இடங்களில் வேலை தேடியும் வயதும், கல்வித் தேர்ச்சிக் குறைவும் சேர்ந்து எனக்கு திருப்திகரமான சம்பளத்துடன் வேலை அமையவில்லை. வீட்டில் என்னை மிகவும் மரியாதை குறைவாக நடத்தத் தொடங்கினாள் என் மனைவி. வேண்டா வெறுப்புடன் அவள் விட்டெறியும் நகைகளை விற்று குடும்பம் தட்டுத் தடுமாறி தள்ளாடி நடக்க ஆரம்பித்தது.
குழந்தைகளுக்கு நல்ல உணவு இல்லை. இளைய குழந்தைகளுக்கு பால் இல்லை. எனக்கோ வீட்டில் மரியாதையும், அன்பும் இல்லை...!

நான் எவ்வளவோ சம்பாதித்துக் கொடுத்தேன், என் மனைவியின் ஊதாரித்தனத்தினால் இன்று வறியனாகி வேதனையில் வாடி நின்றேன்.
என் மனைவி என்னைப்பற்றி ஓயாது வாசித்த புகார்ப்பட்டியல் என் குழந்தைகள் என்னை மதிக்காமலும், என்பால் அன்பில்லாமலும் ஆக்கிவிட்டிருந்தது. கொஞ்சமும் வாய் கூசாது என்னை குடிகாரன் என்று குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள் என் மனைவி.

சோகம் என்னை சூரையாடியது. என் பெற்றோர், உடன்பிறந்தோரின் மீது ஏக்கம் பிறந்தது. வேலை, வேலை என்று என் வாழ்வின் பெரும்பகுதியை தொலைத்தவன் நான், அதில் சொல்ல முடியாத ஒரு மாபெரும் பாவத்தையும் செய்திருந்தேன். ஆம் சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் என் தாய் இறைவனடி எய்தினார். எத்தனை சுயநலக்காரன் நான் ? என்னை சீராட்டி, பாலூட்டி வளர்த்த என் தாயின் இறுதிச் சடங்கிற்கும் வேலையைக் காரணங்காட்டி நான் செல்லவில்லை.இன்று அதை நினைத்து வருந்தி அழுதேன், ஆண்மகன் அழக்கூடாது என்கிறார்கள். ஆனால் என் நிலை என்னை கலங்கடித்து கண்ணீர் விடச்செய்தது. என் உடன் பிற‌ந்தவர்கள்  மன்னிப்பார்களா ? எனக்கு உதவுவார்களா ? ஆதங்கத்துடன் போன் செய்தேன். அண்ணன் பேசினார். சுருக்கமாக என் நிலையை விவரித்தேன். உடனே புறப்பட்டு வருமாறு அண்ணன் அழைத்தார். இரத்த பந்தத்தின் வலிமையை எண்ணி மகிழ்ந்தேன். வீட்டிற்கு வந்து புறப்படுவதற்கு தயாரானேன். என் குடும்பத்தினரை காண‌ச் செல்வதாக ரேவதியிடம் கூறி அனுமதி வாங்க முடியாது. நான் அவளுக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தம், என் உழைப்பு முழுமையும் அவர்களையே சேர வேண்டும், எந்த நிலையிலும் நான் என் குடும்பத்தினருடன் இணைந்துவிடக்கூடாது என்பது அவள் எண்ணம். இதை அறிந்திருந்ததால் குழந்தைகளிடம் வேலை விடயமாய் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டேன்.

என் உற‌வுகளிடம் சென்று சேர்ந்தேன், என் தோற்றத்தையும், நிலையையும் கண்டு அவர்கள் கலங்கினர். பாலைவனத்தில் பெய்த மழைபோல் வறுமையாலும், சோகத்தாலும் வரண்டு போயிருந்த என் வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது, தாயின் படத்திற்கு முன் அழுதேன். நோயுற்றிருந்த என் தந்தையின் கரங்களைப் பற்றி ஈரமான என் கண்களில் ஒற்றிக்கொண்டேன், ஒரு தந்தையின் நிலையிலிருந்து என் தந்தையின் உழைப்பையும், தியாகத்தையும் உணர்ந்து முதன் முறையாய் வருந்தினேன். உற‌வுகள் அனைத்தையும் ஒருங்கே சந்தித்து மகிழ்ந்தேன், அவர்கள் அன்பில் நெகிழ்ந்தேன். தாயின் நிலையிலிருந்து வீட்டுப் பெண்மணிகள் விரும்பியதைச் சமைத்துப் பறிமாறி உபசரித்தனர். நாட்கள் நகர்ந்ததே தெரியாமல் மூன்று நாட்கள் கரைந்தது, நான் திரும்ப வேண்டிய நாளும் வந்தது, அண்ணன் பண‌ உதவி செய்தார். கூடிய விரைவில் குடும்பத்துடன் திரும்பி வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தினார். எனக்கும் அதுவே சரியான வழியாய்ப்பட்டது.

மனம் நிறைய மகிழ்வுடன், கை நிறைய பணத்துடன் வீடு திரும்பினேன், நிச்சயமாய் இந்தப் பண‌த்தை ஊதாரியான என் மனைவி ரேவதியிடம் கொடுக்கக் கூடாது, நாமே நல்ல விதத்தில் குடும்பத்திற்கு அவசரத்திற்கான சேமிப்பாய் வைத்துகொள்வோம் எனும் எண்ணத்தில் பணத்தை வங்கியில் சேமித்துவிட்டு வீடு திரும்பினேன். விபரீதம் உண‌ராமல் !

 நான் என் சொந்தங்களை சென்று கண்டதை ரேவதியின் உற‌வினர் யாரோ அவளுக்குத் தெரியப்படுத்தியிருக்க, கடும் கோபத்தில் அவள் இராட்சசியாய் மாறியிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கையில் கிடைத்த ஒரு பொருளை என்னை நோக்கி வீசினாள், மிகச்சரியாக அது என் தலையில் மோதி, என் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. ஆவேசமான நானும் திருப்பி அவளைத் தாக்க ஆரம்பித்தேன். உடனே என் மூத்த பிள்ளைகள் மிகவும் மூர்க்கமாக என்னைத் தாக்க ஆரம்பித்தனர். யாருக்காக இரவு, பகல் பாராது உழைத்தேனோ, யாருடைய மகிழ்ச்சிக்காக, என், உடல், பொருள், ஆவி, உழைப்பு அத்தனையும் சமர்ப்பண‌ம் செய்திருந்தேனோ அவர்கள் என்னை அடித்துத்துவைத்துக் கொன்டிருந்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாக நான் மயங்கிச் சரிந்தேன்.

கண் விழித்துப் பார்க்கும்போது என் வீட்டின் ஒரு இருட்டறையில் என் கை கால்கள் கட்டப்பட்டு நான் கிடந்தேன். உடலில் ஆங்காங்கே இரத்தம் உறைந்த காயங்கள். உடலைவிட மனதில் அதிக வலி. வெகுவாய் பிரயத்தனப்பட்டுக் கொன்டு என் கட்டுக்களை அவிழ்த்து என்னை விடுவித்துக்கொண்டேன். கையிலும் காலிலும் பலத்த அடி, சரிவர நட‌க்க இயலவில்லை. வீடு நிசப்தமாயிருந்தது. அனைவரும் உற‌ங்கிவிட்டனர் போலும். மெல்ல அங்கிருந்து கிள‌ம்பினேன். விதியை நொந்தவாறு தாங்கித் தாங்கி நடந்தேன். என்னைக் கொஞ்சம் சரி செய்துகொண்டேன் பின்னர் அருகாமையிலிருந்த காவல்துறை அலுவலகத்திற்குச் சென்றேன். என் நிலையை அங்கே பதிவு செய்தேன். என் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொன்டு விடை பெற்றேன். என செயல் சரியா, தவறா ? எனக்குப் புரியவில்லை. அங்கிருந்து விடைபெற்று என் காயங்களும், அதில் வழியும் குறுதியும் மட்டுமே என்னுடன் தொடர‌, பொழுது புலர இன்னும் கொஞ்சம் நேரமிருக்க, அந்த பின்னிரவில் திசை இழந்து தொடர்கிற‌து எனது பயணம்.......

@"மன்னன்" மாத இதழில் வெளிவந்த‌ படைப்பு