புதன், 1 ஜூலை, 2015

பாட்டி சொன்ன பேய்க்கதை

அந்தக் காலத்தில் நமது தாத்தாபாட்டிமார் நம் போல் கணிணி யுகம் காணாமலேயே வாழ்ந்து மறைந்தனர். மின்சாரம் இல்லாத அவர்கள் வாழ்க்கையை நினைத்தால் நமக்குப் பகீரென்கிறது. அப்போதைய அவர்களின் மிகவும் நாகரீகமான பொழுதுபோக்கு என்றால் அவ்வப்போது தோட்டங்களில் திரையிடப்படும் திரைப்படங்களே எனத் தோன்றுகிறது .

பால்மரம் சீவும் வாழ்க்கை, அல்லது காட்டை அழிக்கும் வெளிக்காட்டு வேலை.  ஆண்மக்களுக்கு வேலை முடிந்து ஓய்ந்த பொழுதுகளில் ஒன்றாய்க் கூடி சிறிய அளவில் உடும்பு, அழுங்கு போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, கூடவே கூட்டமாய் ஆற்றில் இறங்கி வலைவீசி மீன்கள் பிடிப்பது. மாலையில் இள‌ங்காளைகளுக்கெனவே இருக்கிற‌து சடுகுடு போன்ற விளையாட்டுக்கள். பெரிசுகளுக்கெனவே ஊருக்குள்ளே வைத்திருக்கப்படும் பார், க‌ள்ளுக்கடை எனும் பெயரில். அப்புறம் இருக்கவே இருக்கிறது வருசத்துக்கொரு முறை தோட்டத் திருவிழா. இது தானே அவர்கள் வாழ்க்கை. என்ன ஒரு எளிமையான வாழ்க்கை..!

ஆண்கள் வாழ்க்கை இப்படி என்றால் பெண்கள் நிலைமையோ வேறு, வீட்டில் அமர்ந்து சீரியல் பார்க்கும் பாக்கியசாலிகள் அல்லவே அவர்கள். காலையில் ஆலக்கரை சங்குக்கு  வேலைக்கு ஓடிப் போய் மதியம் வீடு திரும்பி, அடுப்பெரிக்க காட்டிலே சுள்ளி பொருக்கி, சமைக்க ஆற்றிலே நீர் முகந்து வந்து, கைவசமாய் தோட்டத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் கத்தரி, வெண்டை,  முருங்கை, மரவள்ளிக்கிழங்கோடு ஆற்று மீன்களைக் கொன்டு கறிசமைத்து குடும்பத்தை நடத்தும் அவர்களில் பலருக்கு கிடைக்கும் சமயங்களில் அரட்டையடிப்பது மட்டுமே வசதியான பொழுது போக்கு.

இப்படியாக அவர்கள் பேசும் கதைகளில் அண்டை அயலார் கதைகளோடு , அமானுக்ஷ்ய கதைகளும் தப்புவதில்லை. என் பாட்டியாரும் இப்படியெல்லாம் வாழ்ந்தவர் என்பதை சிறுமியாயிருந்த தருணத்தில் கேட்டு இரசித்ததுண்டு. உண்மையோ, கற்பனையோ, அல்லது உண்மைக்கு கைகால் மூக்கு வாயெல்லாம் வைத்து பில்டப் பண்ண கதையோ தெரியாது. அவர் நீட்டி முழக்கி என் ஒருத்திக்காக உட்கார்ந்து மணிக்கணக்காய் கதை சொல்வார். அதைக் கேட்கக் கேட்க அத்தனை சுவாரஸ்யமாய் இருக்கும் அப்படி ஒரு கதை இது.....! சும்மா ஜாலியாய் கேட்கலாம் வாருங்கள்...

அந்த தோட்டத்தில் ரங்கனும், இருளாயியும் ஆதர்ச தம்பதிகள். இருவருக்கும் திருமணம் முடிந்து பல வருசங்கள் ஆன பின்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அவர்களுக்கு அது ஒரு பெரிய கவலையாய் இருந்தது.

கணவன், மனைவி இருவருமே நல்ல உழைப்பாளிகள், அயராது வேலை செய்து கூடவே பகுதி நேரமாய் ஆடு மாடு வளர்த்து நிறைய பணம் சேர்த்தனர். சேர்த்த பணத்தைக் கொன்டு ரங்கன் தன் அருமை மனைவி இருளாயிக்கு நிறைய நகைகள் செய்து போட்டான். இரட்டை வடம் சங்கிலி, திருவிளையாடல் தோடு (அதாங்க திருவிளையாடல் படத்திலே சாவித்திரி அம்மா மீனவர் பொண்ணு வேடத்தில காதிலே போட்டிருப்பாங்களே, பெரிசா குமுக்கா ஒரு தோடு, அதுதானாம் :) அப்புறம் காசுமாலை, கைவளை, காப்பு, மோதிரம் அப்படி இப்படின்னு ஏகத்துக்கு ஒரு பால்டின் குவளை நிறைய நகை சேர்த்து வச்சிருந்தாங்களாம் ரெண்டு பேரும். ஏதாவது கண்ணாலம் காட்சின்னாதான் இருளாயி அந்த நகையெல்லாம் அணிவது வழக்கமாம்.

கருத்தப் பொண்ணுக்கு நகையைப் போட்டு கண்ணாலப் பாருன்னு ஒரு பழமொழி உண்டுங்க‌, அதிலே மறுவரி செவத்தப்பொன்னுக்கு நகையைப்போட்டு ......ன்னு கேவலமா ஒரு வரி வரும், அந்தப் பழமொழிய பாதியிலேயே விட்டுருவோம். இருளாயி கருத்தப் பெண்மணி நகைபோட்டா பளிச் பளிச்சுனு அப்படி ஒரு எடுப்பு. ஊருக்கண்ணு, உற‌வுக்கண்ணெல்லாம் அப்போ இருளாயி மேலேதான்.

இப்படி இருளாயி போட்ட‌ நகைகளை அந்த‌த் தோட்டத்துப் பெண்கள் இரவல் வாங்கி அணிவதுண்டு. இருளாயிக்கு நல்ல மனம், யார் கேட்டாலும் தனது நகைகளை இரவல் தருவாளாம். அவள் கணவனும் தடையொன்றும் சொல்வதில்லை. அதனால் தோட்டத்தில் இந்த தம்பதிகளுக்கு நல்ல பெயர்.

இப்படித்தான் ஒருநாள் பக்கத்து வீட்டு பார்வதியின் உறவுக்காரங்க வீட்டுல ஒரு விக்ஷேசம். பார்வதியும் அங்கே ஆஜராக வேண்டி இருந்தது. பார்வதி பாவப்பட்ட பெண்மணி, கணவன் முழு நேர குடிகாரன், ந‌ண்டும் சிண்டுமாய் 7 பிள்ளைகள். கணவன் சம்பாத்தியம் அவன் "குடி" தேவைக்கே சரியாய் போக பார்வதி சம்பாத்தியம் மட்டுமே குடும்பத்துக்கு சோறு போட்டது. இதில் நகை நட்டுக்கு எங்கே போவாள் பார்வதி ? நேரே இருளாயிடம் நகை இரவல் கேட்க வந்தாள். உடனே இருளாயியும், இப்போ இரவாகிப் போச்சி, நாளக்கி கருக்கலிலே வந்து வாங்கிட்டுப் போ என கரிசண‌மாக சொல்லியனுப்பினாள். அவர்கள் அறியாத‌து என்னனவென்றால் அவர்களின் சம்பாக்ஷனையை அவர்களைத் தவிர்த்து அங்கே வேறு "சிலவும்" உண்ணிப்பாய் கேட்டுக் கொன்டிருந்தன !

பொழுது விடிய இன்னும் பல மணி நேரங்கள் இருக்கையில், இருளாயி வீட்டு வாசல் கதவு இடி இடியென இடிக்கப்பட்டது. த‌ட்டுத் தடுமாறி தூக்கம் விழித்து, யாரென்று இருளாயி கேட்க, நாந்தான் பார்வதி வந்திருக்கேன், நகையெல்லாம் கொடு" என பார்வதியின் குரல் வெளியிலிருந்து கேட்டது.
அதிகம் யோசிக்காமல் தூக்கக் கலக்கத்தோடு நகை அடங்கிய பால்டின் குவளையை எடுத்து கதவைத் திற‌ந்து வெளியில் நின்றிருந்த "பார்வதியிடம்" கொடுத்தாள். அவள் போனபின் கதவை சாத்திவிட்டு மீண்டும் படுக்கையில் வந்து விழுந்து தூங்கிப் போனாள்.

விடிகாலை வெள்ளி முளைக்கும் முன் மீண்டும் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத்திற‌ந்தாள், அவள் வீட்டு வாசலில் மீண்டும் பார்வதி நகையைக் கேட்டு நின்றாள். அதிர்ந்து போனாள் இருளாயி, அப்போ அவளுக்கு முன் வந்து நகைகளை வாங்கிப் போனது யார் ? வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொன்டு அழுதாள் இருளாயி, பார்வதி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள்.

இருளாயி ஒரேயடியாய் விசனப்பட்டுப் போனாள். நோயில் விழுந்து ஒடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போனாள். அவளைப் பார்க்க பார்க்க அவள் கணவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. யார் நகையை களவாடியிருப்பார் என மண்டையை உடைத்துக் கொண்டான். அவனுக்கு அந்தத் தோட்டத்தலையாரி ரொம்ப பழக்கம். ஊரில் அவருக்குத் தெரியாத‌து எதுவுமில்லை எனும் அளவுக்குப் பிரபலம். அவரைப் போய்ப் பார்த்து தன் குறையை சொல்லி அழுதான் ரங்கன்.

விக்ஷயம் முழுதும் கேட்ட தலையாரி அவனுக்கு சில விடயங்களைச் சொன்னார். அதைக் கேட்டவனுக்கு ரொம்ப ஆச்சரியம். அதை உறுதிப்படுத்த அன்று இருட்டுவதற்கு முன்பாகவே ஊருக்கு வெளியிலிருந்த அந்த பாழடைந்த அரசமரக்காட்டுக்குப் போனான். பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி மறைவாக உட்கார்ந்து கொன்டான்.

நேரம் கடந்து கொன்டிருந்தது. நடுச்சாமம் கடந்த பின்னர், அந்த பாழடைந்த அரசமரத்தைச் சுற்றி மினுக் மினுக்கென ஒளிப்புள்ளிகள் தோன்றின, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகி வெள்ளை வெள்ளையாய் புகை போன்ற‌  உருவங்கள் கால்களற்று கோர மனித வடிவங்களில் அங்கே வலம் வந்து கொன்டிருந்தன‌. அவற்றின் முடி, கண்கள்,  வாயிலிருந்து நெருப்புக் கோள‌ங்கள் ஒளிவீசிக் கொன்டிருந்தன. ஓ! கொள்ளிவாய்ப்பிசாசுகள் ! ரங்கன், மனதில் நினைத்துக்கொன்டு மரமோடு மரமாய் ஐக்கியமாகி சுற்றிலும் நடப்பதை கவனித்துக்கொன்டிருந்தான்.

அந்தக் கோர உருவங்களில் ஒன்று அந்த இத்துப்போன அரசமரத்தின் பொந்திலிருந்து ஏதோ ஒன்றை எடுக்க, கொஞ்ச நேரத்தில் அவற்றின் கையில் இருளாயியின் நகைகள் அடங்கிய பால்டின் குவளையைக் கண்டான் ரங்கன். அவனுக்கு மூச்சே அடங்கிவிடும் போலிருந்தது.

அந்தக் கொடூர கொள்ளிவாய்ப்பிசாசுகள் யாவும் ஆளுக்கொன்றாய் அடித்துப் பிடித்துக்கொன்டு அந்த நகைகளை மாட்டிக்கொன்டு ஆர்ப்பரித்து ஆரவாரமாய் கும்மாளமிட்டன. "மேலு காதும் குத்தல, மூக்கு அதுவும்   குத்தல, தானா துலங்குதடி தட்டுவாணி பித்தள " என இன்னும் ஏதேதோ சொல்லி ஆட்டம் போட்டன அந்த அரசமரத்துப் கொள்ளிவாய்ப்பிசாசுகள்.

வெள்ளி முளைக்க ஆரம்பித்தவுடன், எல்லா பிசாசுகளிடமும் இருந்த நகைகளை எல்லாம் ஒரு கொள்ளிவாய்பிசாசு பிடுங்கி அதே பொந்தில் மறைத்து வைத்து விட்டு , யாவும் காட்டுக்குள் ஓடி மறைந்து போயின.

பொழுது புலர்ந்தது. யாவற்றையும் ஒன்று விடாமல் கவனித்துவந்த ரங்கன். மரத்திலிருந்து இறங்கி ஓடிப்போய் தலையாரியையும் தோட்டத்து மக்களையும் தான் கண்டதைக்கூறி அழைத்து வந்தான்.

கொஞ்சம் மந்திரம் மாயம் கற்ற தலையாரி சில மந்திர உச்சாடணங்கள் செய்து மரப்பொந்திலிருந்த நகைப்பொட்டலத்தை எடுத்து ரங்கனிடம் சேர்ப்பித்தார், பின்னர் சில ஆண்கள் ஒன்றுகூடி அந்த மரத்தை தீவைத்து கொளுத்தி சாம்பலாக்கிவிட்டு வீடுதிரும்பினர்.

நகை மீண்டதில் இருளாயிக்கு மெத்த சந்தோக்ஷம். ரங்கனின் வீர‌த்தையும் சாமார்த்தியத்தையும் பாட்டாய் பாடி அக மகிழ்ந்தாள். தலையாரி சொல்லித்தந்தபடி அன்றே அவளை அழைத்துக்கொன்டு நகையையும் எடுத்துக்கொன்டு பத்து நாளைக்கு பக்கத்து தோட்டத்தில் தன் தங்கை வீட்டுக்கு பயணப்பட்டான் ரங்கன்.

அந்த இரவு நடுச்சாமம் கடந்தது, தோட்டம் விழித்துக்கொன்டு மெளனம் காத்தது. அனைவரும் வீட்டுக்குள்ளே தூக்கமின்றி உன்னிப்பாய் கேட்க, அந்த ஆலமரம் எரிந்து போன தோப்பிலிருந்து பெரும் ஓலங்களும் அலரல்களும் தோட்டத்தையும் அதிரவைத்தன‌....!