புதன், 21 அக்டோபர், 2015

ஆண்பாவம் (நிறைவு)

வருடங்கள் உருண்டோடின, எங்களின் இனிய வாழ்விற்கு அடையாள‌மாய் ஒன்றன் பின் ஒன்றாய் 6 குழந்தைகள் பிறந்தனர். திருமணமானது முதல் ரேவதியை வேலைக்கு அனுப்பாது வீட்டிலேயே வைத்திருந்தேன். அவள் மனம் மகிழ அவள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிவைத்தேன். கிடைக்கும் சம்பள‌த்தை என் அவசிய தேவைகளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதப்பணம் அத்தனையும் அவள் கையில் கொடுத்துவிடுவேன். குடும்பம் பெருகிய பின் தேவைகள் அதிகரித்து வருமானப் பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது. இரவு பகல் சளைக்காது வேலை செய்தும் வீட்டுச் செலவுகளில் துண்டு விழுந்தது.

ரேவதி இதை சாக்காய் வைத்து அதிகம் சம்பாதிக்க அயலூருக்கு செல்லலாம் என நச்சரித்து, கெடாவிலிருந்த என்னை மலாக்காவிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே அவளின் நெருங்கிய உற‌வினர்கள் பலர் வாழ்ந்துவந்தனர். என் உறவுகளிடமிருந்து பிரிந்த‌து எனக்கு வருத்தமே. என்ன செய்வது, வாழ்வைத் தொடரவேண்டுமே, அதற்கு அதிகப் பணம் மிக முக்கியமல்லவா ?

நிறைய முயற்சிகளுக்குப்பின் ஒரு பெரிய தொழிற்சாலையில் அனுபவத்தை முன்வைத்து நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. குடும்பத்தைக் கரையேற்ற அல்லும் பகலும் அயராது உழைக்க ஆரம்பித்தேன்.

குடும்பத்துடன் செலவிடும் நேரம் சொற்பமானது, வேலை மட்டுமே என் கவனமானது, கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்தேன். கை நிறைய சம்பளத்தை ரேவதியின் கையில்  கொடுத்து அவள் முகம் மலரும் அழகைக் கண்டு மகிழ்வேன். எல்லாப் பொறுப்புகளையும் அவளே முன்வந்து கவனிக்க, கவலையற்று வேலையில் முழுக்கவனம் செலுத்தினேன். என் உடல் சோர்ந்து, அலுப்படையும் நேரங்களில், ரேவதி நாம் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து வைத்திருப்பாள். கூடிய விரைவில் அந்தப் பண‌த்தைக்கொன்டு ஒரு சிறு வியாபாரம் துவங்கி, செளகரியமாக தொழில் செய்ய வேண்டும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என மனக்கோட்டைகள் கட்டியவாரே வேலை செய்வேன். மனம் உற்சாகமடைய அலுப்பும் போன இடம் தெரியாது.

என் மூத்த குழந்தைகளுக்கு பதின்ம வயதானது. இடிவிழுந்தாற்போல என் தொழிற்சாலை திடீர் நக்ஷ்டத்தில் மூடப்பட்டது. நிலைகுலைந்துபோனேன் நான். இருப்பினும் மனைவியின் சேமிப்பில் இருக்கும் பணத்தைக் கொன்டு நாம் விரும்பிய வியாபாரம் துவங்கலாம் எனும் எண்ணத்துடன் வீடு திரும்பி ரேவதியிடம் நடந்ததைக் கூறினேன். கலங்கிய எனக்கு ஆறுதல் கூறி அரவணைப்பாள் என ஓடோடி வந்த என்னை நான் நிலை குலையும் வண்ணம் கோப முகங்காட்டி ஆத்திரத்துடன் பேசினாள். அவள் நடவடிக்கை எனக்கு ஆச்சரியத்தைத் தர, என் சம்பளப்பணத்தில் சேமிப்பைப்பற்றி அவளிடம் வினவ ஆரம்பித்தேன். அதற்கு அவள் கூறிய பதில் எனக்கு ஆயிரம் இடிகள் என் தலையில் ஒரே சமயத்தில் இற‌ங்கிய வேதனையைத் தந்தது. கொஞ்சமும் சேமிக்காமல் ஊதாரியாய் எல்லாப் பண‌த்தையும் செலவழித்தும் தன் உறவுகளுக்கு தாரை வார்த்தும் முடித்துவிட்டாள் என் மனைவி. இவை யாவும் என் கவனத்திற்கு வராமல் அத்தனை சாமர்த்தியமாய் செயல்பட்டிருக்கிறாள் என் அருமை மனைவி.
ஆத்திரத்தில் கண்மறைக்க முதல் முதலாய் அவளுக்கும் எனக்கும் ஆரம்பித்தது சண்டை. அன்று ஆரம்பித்தது எனக்கு கலிகாலம். அநாகரீகமாய் சத்தமிட்டு சண்டையிடத்துவங்கிய என் மனைவி சத்தம் கேட்டு விழித்த குழந்தைகளைக் கண்டதும் அழுது புலம்பி மாய்மாலம் செய்யத் துவங்கினாள். என் குழந்தைகள் திகைப்புடன் எங்களை நோக்கினர். ரேவதியின் கொடூரமான மறுபக்கம் ஆரம்பமானது....

என் வாழ்வின் வேதனையான காலக்கட்டம் ஆரம்பித்துவிட்டது என்பதை உண‌ர்ந்தேன். பல இடங்களில் வேலை தேடியும் வயதும், கல்வித் தேர்ச்சிக் குறைவும் சேர்ந்து எனக்கு திருப்திகரமான சம்பளத்துடன் வேலை அமையவில்லை. வீட்டில் என்னை மிகவும் மரியாதை குறைவாக நடத்தத் தொடங்கினாள் என் மனைவி. வேண்டா வெறுப்புடன் அவள் விட்டெறியும் நகைகளை விற்று குடும்பம் தட்டுத் தடுமாறி தள்ளாடி நடக்க ஆரம்பித்தது.
குழந்தைகளுக்கு நல்ல உணவு இல்லை. இளைய குழந்தைகளுக்கு பால் இல்லை. எனக்கோ வீட்டில் மரியாதையும், அன்பும் இல்லை...!

நான் எவ்வளவோ சம்பாதித்துக் கொடுத்தேன், என் மனைவியின் ஊதாரித்தனத்தினால் இன்று வறியனாகி வேதனையில் வாடி நின்றேன்.
என் மனைவி என்னைப்பற்றி ஓயாது வாசித்த புகார்ப்பட்டியல் என் குழந்தைகள் என்னை மதிக்காமலும், என்பால் அன்பில்லாமலும் ஆக்கிவிட்டிருந்தது. கொஞ்சமும் வாய் கூசாது என்னை குடிகாரன் என்று குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள் என் மனைவி.

சோகம் என்னை சூரையாடியது. என் பெற்றோர், உடன்பிறந்தோரின் மீது ஏக்கம் பிறந்தது. வேலை, வேலை என்று என் வாழ்வின் பெரும்பகுதியை தொலைத்தவன் நான், அதில் சொல்ல முடியாத ஒரு மாபெரும் பாவத்தையும் செய்திருந்தேன். ஆம் சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் என் தாய் இறைவனடி எய்தினார். எத்தனை சுயநலக்காரன் நான் ? என்னை சீராட்டி, பாலூட்டி வளர்த்த என் தாயின் இறுதிச் சடங்கிற்கும் வேலையைக் காரணங்காட்டி நான் செல்லவில்லை.இன்று அதை நினைத்து வருந்தி அழுதேன், ஆண்மகன் அழக்கூடாது என்கிறார்கள். ஆனால் என் நிலை என்னை கலங்கடித்து கண்ணீர் விடச்செய்தது. என் உடன் பிற‌ந்தவர்கள்  மன்னிப்பார்களா ? எனக்கு உதவுவார்களா ? ஆதங்கத்துடன் போன் செய்தேன். அண்ணன் பேசினார். சுருக்கமாக என் நிலையை விவரித்தேன். உடனே புறப்பட்டு வருமாறு அண்ணன் அழைத்தார். இரத்த பந்தத்தின் வலிமையை எண்ணி மகிழ்ந்தேன். வீட்டிற்கு வந்து புறப்படுவதற்கு தயாரானேன். என் குடும்பத்தினரை காண‌ச் செல்வதாக ரேவதியிடம் கூறி அனுமதி வாங்க முடியாது. நான் அவளுக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தம், என் உழைப்பு முழுமையும் அவர்களையே சேர வேண்டும், எந்த நிலையிலும் நான் என் குடும்பத்தினருடன் இணைந்துவிடக்கூடாது என்பது அவள் எண்ணம். இதை அறிந்திருந்ததால் குழந்தைகளிடம் வேலை விடயமாய் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டேன்.

என் உற‌வுகளிடம் சென்று சேர்ந்தேன், என் தோற்றத்தையும், நிலையையும் கண்டு அவர்கள் கலங்கினர். பாலைவனத்தில் பெய்த மழைபோல் வறுமையாலும், சோகத்தாலும் வரண்டு போயிருந்த என் வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது, தாயின் படத்திற்கு முன் அழுதேன். நோயுற்றிருந்த என் தந்தையின் கரங்களைப் பற்றி ஈரமான என் கண்களில் ஒற்றிக்கொண்டேன், ஒரு தந்தையின் நிலையிலிருந்து என் தந்தையின் உழைப்பையும், தியாகத்தையும் உணர்ந்து முதன் முறையாய் வருந்தினேன். உற‌வுகள் அனைத்தையும் ஒருங்கே சந்தித்து மகிழ்ந்தேன், அவர்கள் அன்பில் நெகிழ்ந்தேன். தாயின் நிலையிலிருந்து வீட்டுப் பெண்மணிகள் விரும்பியதைச் சமைத்துப் பறிமாறி உபசரித்தனர். நாட்கள் நகர்ந்ததே தெரியாமல் மூன்று நாட்கள் கரைந்தது, நான் திரும்ப வேண்டிய நாளும் வந்தது, அண்ணன் பண‌ உதவி செய்தார். கூடிய விரைவில் குடும்பத்துடன் திரும்பி வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தினார். எனக்கும் அதுவே சரியான வழியாய்ப்பட்டது.

மனம் நிறைய மகிழ்வுடன், கை நிறைய பணத்துடன் வீடு திரும்பினேன், நிச்சயமாய் இந்தப் பண‌த்தை ஊதாரியான என் மனைவி ரேவதியிடம் கொடுக்கக் கூடாது, நாமே நல்ல விதத்தில் குடும்பத்திற்கு அவசரத்திற்கான சேமிப்பாய் வைத்துகொள்வோம் எனும் எண்ணத்தில் பணத்தை வங்கியில் சேமித்துவிட்டு வீடு திரும்பினேன். விபரீதம் உண‌ராமல் !

 நான் என் சொந்தங்களை சென்று கண்டதை ரேவதியின் உற‌வினர் யாரோ அவளுக்குத் தெரியப்படுத்தியிருக்க, கடும் கோபத்தில் அவள் இராட்சசியாய் மாறியிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கையில் கிடைத்த ஒரு பொருளை என்னை நோக்கி வீசினாள், மிகச்சரியாக அது என் தலையில் மோதி, என் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. ஆவேசமான நானும் திருப்பி அவளைத் தாக்க ஆரம்பித்தேன். உடனே என் மூத்த பிள்ளைகள் மிகவும் மூர்க்கமாக என்னைத் தாக்க ஆரம்பித்தனர். யாருக்காக இரவு, பகல் பாராது உழைத்தேனோ, யாருடைய மகிழ்ச்சிக்காக, என், உடல், பொருள், ஆவி, உழைப்பு அத்தனையும் சமர்ப்பண‌ம் செய்திருந்தேனோ அவர்கள் என்னை அடித்துத்துவைத்துக் கொன்டிருந்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாக நான் மயங்கிச் சரிந்தேன்.

கண் விழித்துப் பார்க்கும்போது என் வீட்டின் ஒரு இருட்டறையில் என் கை கால்கள் கட்டப்பட்டு நான் கிடந்தேன். உடலில் ஆங்காங்கே இரத்தம் உறைந்த காயங்கள். உடலைவிட மனதில் அதிக வலி. வெகுவாய் பிரயத்தனப்பட்டுக் கொன்டு என் கட்டுக்களை அவிழ்த்து என்னை விடுவித்துக்கொண்டேன். கையிலும் காலிலும் பலத்த அடி, சரிவர நட‌க்க இயலவில்லை. வீடு நிசப்தமாயிருந்தது. அனைவரும் உற‌ங்கிவிட்டனர் போலும். மெல்ல அங்கிருந்து கிள‌ம்பினேன். விதியை நொந்தவாறு தாங்கித் தாங்கி நடந்தேன். என்னைக் கொஞ்சம் சரி செய்துகொண்டேன் பின்னர் அருகாமையிலிருந்த காவல்துறை அலுவலகத்திற்குச் சென்றேன். என் நிலையை அங்கே பதிவு செய்தேன். என் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொன்டு விடை பெற்றேன். என செயல் சரியா, தவறா ? எனக்குப் புரியவில்லை. அங்கிருந்து விடைபெற்று என் காயங்களும், அதில் வழியும் குறுதியும் மட்டுமே என்னுடன் தொடர‌, பொழுது புலர இன்னும் கொஞ்சம் நேரமிருக்க, அந்த பின்னிரவில் திசை இழந்து தொடர்கிற‌து எனது பயணம்.......

@"மன்னன்" மாத இதழில் வெளிவந்த‌ படைப்பு




 
















 

 




















வியாழன், 24 செப்டம்பர், 2015

ஆண்பாவம்

வணக்க‌முங்க, என் பேரு ராஜசேகர் என்ற ராஜா. சாதனையாள‌ர்கள் மத்தியில் சாமானியனான என் வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ளவே இந்த படைப்பு. பெண்பாவம் பொல்லாதுன்னு சொல்றாங்க, அப்ப ஆண் பாவமே இல்லையா? தொடர்ந்து படிங்க....

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கெடாவில் உள்ள ஓர் இரப்பர் தோட்டத்தில். உடன் பிறந்தோர் 11 பேர். நான்தான் கடைக்குட்டி, ஏகத்துக்கு செல்லம். படிப்பு ஒழுங்காய் ஏற‌வில்லை, இருந்தும் ஓரளவு படித்தேன். பெற்றோரும் உடன்பிறந்தோரும் என் போக்கிலேயே விட்டனர். பாலப்பருவம் பாகாய் இனித்தது. நண்பர்கள், ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம் என வாழ்க்கை நகர்ந்தது, படிப்பு முடிந்து, பதின்ம வயது கடந்து வாலிபனாய் வலம்

வரலானேன்.

காலப்போக்கில் நாட்டின் முன்னேற்றம் தோட்டங்களை நாகரீகம், நவீனம் எனும் பெயரில்  கபளீகரம் செய்யத்துவங்கியது. இந்தியர்களின் எதிர்காலத்தை/வாழ்வாதாரத்தை அது வெகுவாகப் பாதித்தது. சூரைத்தேங்காயாய் சிதறிய தோட்டத்து மக்கள் வாழ்வு தேடி பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

நானும் எனது குடும்பமும் அருகாமையிலிருந்த நகருக்கு குடிபெயர்ந்தோம். எனது சகோதர சகோதரிகள் அருகாமையிலிருந்த தொழிற்சாலைகளில் வேலைசெய்ய ஆரம்பித்தனர். அதன்பின்னர் ஒருவர் பின் ஒருவராய் மணமுடித்து அவரவர் இல்லற வாழ்வை ஆரம்பித்தனர்.

கட்டிளங்காளையாய் வலம் வந்து கொண்டிருந்த நானும் அருகாமையிலிருந்த சர்க்கரைத்தொழிற்சாலையில் பணிபுரிய ஆரம்பித்தேன்.
விளையாட்டுத்தனமும், வேடிக்கையும், நகைச்சுவை உண‌ர்வும் நிறைந்திருந்தாலும் கூடவே நிறைவாய் பணிபுரியும் திறமையும் எனக்கு வாய்த்திருந்தது. நல்ல பெயர், நிறைய நண்பர்கள், நல்ல வருமானம் என வாழ்க்கை மேலும் இனிக்க ஆரம்பித்தது. அங்கே என் வாழ்வின் அடுத்தக்கட்டம் அரங்கேற‌த் துவங்கியது.

நான் வேலை செய்யும் பகுதியில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ரேவதியின் வரவுதான் அதற்குக் காரணம். ரேவதி என் உள்ள‌த்தில் திருமண ஆசை எழக் காரணமானாள். நல்ல எழுமிச்சம் நிற‌த்தில், வடிவழகுடன், இலட்சணமான முகத்தோடும், இடைவரை கூந்தலோடும் மிகவும் அழகாகக்
காட்சியளித்தாள். நிறைய ஆண்களின் கண்கள் அவளை மொய்க்க அவள் கவனமோ என் மேல் இருப்பதை அவள் தோழியின் வழி அறிய வந்தபோது என் உள்ளம் உவகையில் கூத்தாடியது.

கவர்ச்சியான கருமை நிறம், களையான முகம், உயரமான தோற்ற‌ம், கம்பீரமான குரல், கூடவே நல்ல சுறுசுறுப்பும், கடுமையான உழைப்பாளியாகவும் நான் விளங்குவதாகவும் அதனால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதை அவளின் தோழியின் வாயிலாக அறிந்துகொன்டேன்.

ஒரு நாள் தனிமையில் சந்தித்து இதயத்தை இடம் மாற்றிக்கொன்ட நாங்கள் காதல் வானில் சிறகடித்துப்பறந்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். ரேவதியின் குடும்பத்தினர் முழு சம்மதத்தையும் தந்தனர்.

நான் எதிர்பார்த்தபடியே என் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. உறவினர் பெண்ணை நான் மண‌முடிக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. இருப்பினும் என் மனதைப் புரிந்துகொன்டு ரேவதியையே எனக்கு மனமுடித்துவைக்க முன்வந்தனர்.

சீரும் சிறப்புமாய் திருமணம் நடந்தேறியது, அழகுதேவதையாய் மணவறையில் ஜொலித்தாள் என் இதயராணி ரேவதி. ஆரம்பத்தில் திருமணத்திற்கு தடை சொன்னதால் என்னவோ என் பெற்றோர் எங்களுக்கு தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்துவிட்டு என் சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

ரேவதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. என்னையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாள். திருமண வாழ்க்கை கட்டிக்கரும்பாய் இனித்தது. உலகிலேயே மிகவும் அதிர்க்ஷ்டசாலியான மனிதன் நானே என அகமகிழ்ந்தேன். எல்லாம் கொஞ்சகாலமே....

அடுத்த பதிவில் நிறைவடையும்....

@"மன்னன்" மாத இதழில் வெளிவந்த‌ படைப்பு



   














       




















   

புதன், 1 ஜூலை, 2015

பாட்டி சொன்ன பேய்க்கதை

அந்தக் காலத்தில் நமது தாத்தாபாட்டிமார் நம் போல் கணிணி யுகம் காணாமலேயே வாழ்ந்து மறைந்தனர். மின்சாரம் இல்லாத அவர்கள் வாழ்க்கையை நினைத்தால் நமக்குப் பகீரென்கிறது. அப்போதைய அவர்களின் மிகவும் நாகரீகமான பொழுதுபோக்கு என்றால் அவ்வப்போது தோட்டங்களில் திரையிடப்படும் திரைப்படங்களே எனத் தோன்றுகிறது .

பால்மரம் சீவும் வாழ்க்கை, அல்லது காட்டை அழிக்கும் வெளிக்காட்டு வேலை.  ஆண்மக்களுக்கு வேலை முடிந்து ஓய்ந்த பொழுதுகளில் ஒன்றாய்க் கூடி சிறிய அளவில் உடும்பு, அழுங்கு போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, கூடவே கூட்டமாய் ஆற்றில் இறங்கி வலைவீசி மீன்கள் பிடிப்பது. மாலையில் இள‌ங்காளைகளுக்கெனவே இருக்கிற‌து சடுகுடு போன்ற விளையாட்டுக்கள். பெரிசுகளுக்கெனவே ஊருக்குள்ளே வைத்திருக்கப்படும் பார், க‌ள்ளுக்கடை எனும் பெயரில். அப்புறம் இருக்கவே இருக்கிறது வருசத்துக்கொரு முறை தோட்டத் திருவிழா. இது தானே அவர்கள் வாழ்க்கை. என்ன ஒரு எளிமையான வாழ்க்கை..!

ஆண்கள் வாழ்க்கை இப்படி என்றால் பெண்கள் நிலைமையோ வேறு, வீட்டில் அமர்ந்து சீரியல் பார்க்கும் பாக்கியசாலிகள் அல்லவே அவர்கள். காலையில் ஆலக்கரை சங்குக்கு  வேலைக்கு ஓடிப் போய் மதியம் வீடு திரும்பி, அடுப்பெரிக்க காட்டிலே சுள்ளி பொருக்கி, சமைக்க ஆற்றிலே நீர் முகந்து வந்து, கைவசமாய் தோட்டத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் கத்தரி, வெண்டை,  முருங்கை, மரவள்ளிக்கிழங்கோடு ஆற்று மீன்களைக் கொன்டு கறிசமைத்து குடும்பத்தை நடத்தும் அவர்களில் பலருக்கு கிடைக்கும் சமயங்களில் அரட்டையடிப்பது மட்டுமே வசதியான பொழுது போக்கு.

இப்படியாக அவர்கள் பேசும் கதைகளில் அண்டை அயலார் கதைகளோடு , அமானுக்ஷ்ய கதைகளும் தப்புவதில்லை. என் பாட்டியாரும் இப்படியெல்லாம் வாழ்ந்தவர் என்பதை சிறுமியாயிருந்த தருணத்தில் கேட்டு இரசித்ததுண்டு. உண்மையோ, கற்பனையோ, அல்லது உண்மைக்கு கைகால் மூக்கு வாயெல்லாம் வைத்து பில்டப் பண்ண கதையோ தெரியாது. அவர் நீட்டி முழக்கி என் ஒருத்திக்காக உட்கார்ந்து மணிக்கணக்காய் கதை சொல்வார். அதைக் கேட்கக் கேட்க அத்தனை சுவாரஸ்யமாய் இருக்கும் அப்படி ஒரு கதை இது.....! சும்மா ஜாலியாய் கேட்கலாம் வாருங்கள்...

அந்த தோட்டத்தில் ரங்கனும், இருளாயியும் ஆதர்ச தம்பதிகள். இருவருக்கும் திருமணம் முடிந்து பல வருசங்கள் ஆன பின்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அவர்களுக்கு அது ஒரு பெரிய கவலையாய் இருந்தது.

கணவன், மனைவி இருவருமே நல்ல உழைப்பாளிகள், அயராது வேலை செய்து கூடவே பகுதி நேரமாய் ஆடு மாடு வளர்த்து நிறைய பணம் சேர்த்தனர். சேர்த்த பணத்தைக் கொன்டு ரங்கன் தன் அருமை மனைவி இருளாயிக்கு நிறைய நகைகள் செய்து போட்டான். இரட்டை வடம் சங்கிலி, திருவிளையாடல் தோடு (அதாங்க திருவிளையாடல் படத்திலே சாவித்திரி அம்மா மீனவர் பொண்ணு வேடத்தில காதிலே போட்டிருப்பாங்களே, பெரிசா குமுக்கா ஒரு தோடு, அதுதானாம் :) அப்புறம் காசுமாலை, கைவளை, காப்பு, மோதிரம் அப்படி இப்படின்னு ஏகத்துக்கு ஒரு பால்டின் குவளை நிறைய நகை சேர்த்து வச்சிருந்தாங்களாம் ரெண்டு பேரும். ஏதாவது கண்ணாலம் காட்சின்னாதான் இருளாயி அந்த நகையெல்லாம் அணிவது வழக்கமாம்.

கருத்தப் பொண்ணுக்கு நகையைப் போட்டு கண்ணாலப் பாருன்னு ஒரு பழமொழி உண்டுங்க‌, அதிலே மறுவரி செவத்தப்பொன்னுக்கு நகையைப்போட்டு ......ன்னு கேவலமா ஒரு வரி வரும், அந்தப் பழமொழிய பாதியிலேயே விட்டுருவோம். இருளாயி கருத்தப் பெண்மணி நகைபோட்டா பளிச் பளிச்சுனு அப்படி ஒரு எடுப்பு. ஊருக்கண்ணு, உற‌வுக்கண்ணெல்லாம் அப்போ இருளாயி மேலேதான்.

இப்படி இருளாயி போட்ட‌ நகைகளை அந்த‌த் தோட்டத்துப் பெண்கள் இரவல் வாங்கி அணிவதுண்டு. இருளாயிக்கு நல்ல மனம், யார் கேட்டாலும் தனது நகைகளை இரவல் தருவாளாம். அவள் கணவனும் தடையொன்றும் சொல்வதில்லை. அதனால் தோட்டத்தில் இந்த தம்பதிகளுக்கு நல்ல பெயர்.

இப்படித்தான் ஒருநாள் பக்கத்து வீட்டு பார்வதியின் உறவுக்காரங்க வீட்டுல ஒரு விக்ஷேசம். பார்வதியும் அங்கே ஆஜராக வேண்டி இருந்தது. பார்வதி பாவப்பட்ட பெண்மணி, கணவன் முழு நேர குடிகாரன், ந‌ண்டும் சிண்டுமாய் 7 பிள்ளைகள். கணவன் சம்பாத்தியம் அவன் "குடி" தேவைக்கே சரியாய் போக பார்வதி சம்பாத்தியம் மட்டுமே குடும்பத்துக்கு சோறு போட்டது. இதில் நகை நட்டுக்கு எங்கே போவாள் பார்வதி ? நேரே இருளாயிடம் நகை இரவல் கேட்க வந்தாள். உடனே இருளாயியும், இப்போ இரவாகிப் போச்சி, நாளக்கி கருக்கலிலே வந்து வாங்கிட்டுப் போ என கரிசண‌மாக சொல்லியனுப்பினாள். அவர்கள் அறியாத‌து என்னனவென்றால் அவர்களின் சம்பாக்ஷனையை அவர்களைத் தவிர்த்து அங்கே வேறு "சிலவும்" உண்ணிப்பாய் கேட்டுக் கொன்டிருந்தன !

பொழுது விடிய இன்னும் பல மணி நேரங்கள் இருக்கையில், இருளாயி வீட்டு வாசல் கதவு இடி இடியென இடிக்கப்பட்டது. த‌ட்டுத் தடுமாறி தூக்கம் விழித்து, யாரென்று இருளாயி கேட்க, நாந்தான் பார்வதி வந்திருக்கேன், நகையெல்லாம் கொடு" என பார்வதியின் குரல் வெளியிலிருந்து கேட்டது.
அதிகம் யோசிக்காமல் தூக்கக் கலக்கத்தோடு நகை அடங்கிய பால்டின் குவளையை எடுத்து கதவைத் திற‌ந்து வெளியில் நின்றிருந்த "பார்வதியிடம்" கொடுத்தாள். அவள் போனபின் கதவை சாத்திவிட்டு மீண்டும் படுக்கையில் வந்து விழுந்து தூங்கிப் போனாள்.

விடிகாலை வெள்ளி முளைக்கும் முன் மீண்டும் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத்திற‌ந்தாள், அவள் வீட்டு வாசலில் மீண்டும் பார்வதி நகையைக் கேட்டு நின்றாள். அதிர்ந்து போனாள் இருளாயி, அப்போ அவளுக்கு முன் வந்து நகைகளை வாங்கிப் போனது யார் ? வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொன்டு அழுதாள் இருளாயி, பார்வதி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள்.

இருளாயி ஒரேயடியாய் விசனப்பட்டுப் போனாள். நோயில் விழுந்து ஒடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போனாள். அவளைப் பார்க்க பார்க்க அவள் கணவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. யார் நகையை களவாடியிருப்பார் என மண்டையை உடைத்துக் கொண்டான். அவனுக்கு அந்தத் தோட்டத்தலையாரி ரொம்ப பழக்கம். ஊரில் அவருக்குத் தெரியாத‌து எதுவுமில்லை எனும் அளவுக்குப் பிரபலம். அவரைப் போய்ப் பார்த்து தன் குறையை சொல்லி அழுதான் ரங்கன்.

விக்ஷயம் முழுதும் கேட்ட தலையாரி அவனுக்கு சில விடயங்களைச் சொன்னார். அதைக் கேட்டவனுக்கு ரொம்ப ஆச்சரியம். அதை உறுதிப்படுத்த அன்று இருட்டுவதற்கு முன்பாகவே ஊருக்கு வெளியிலிருந்த அந்த பாழடைந்த அரசமரக்காட்டுக்குப் போனான். பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி மறைவாக உட்கார்ந்து கொன்டான்.

நேரம் கடந்து கொன்டிருந்தது. நடுச்சாமம் கடந்த பின்னர், அந்த பாழடைந்த அரசமரத்தைச் சுற்றி மினுக் மினுக்கென ஒளிப்புள்ளிகள் தோன்றின, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகி வெள்ளை வெள்ளையாய் புகை போன்ற‌  உருவங்கள் கால்களற்று கோர மனித வடிவங்களில் அங்கே வலம் வந்து கொன்டிருந்தன‌. அவற்றின் முடி, கண்கள்,  வாயிலிருந்து நெருப்புக் கோள‌ங்கள் ஒளிவீசிக் கொன்டிருந்தன. ஓ! கொள்ளிவாய்ப்பிசாசுகள் ! ரங்கன், மனதில் நினைத்துக்கொன்டு மரமோடு மரமாய் ஐக்கியமாகி சுற்றிலும் நடப்பதை கவனித்துக்கொன்டிருந்தான்.

அந்தக் கோர உருவங்களில் ஒன்று அந்த இத்துப்போன அரசமரத்தின் பொந்திலிருந்து ஏதோ ஒன்றை எடுக்க, கொஞ்ச நேரத்தில் அவற்றின் கையில் இருளாயியின் நகைகள் அடங்கிய பால்டின் குவளையைக் கண்டான் ரங்கன். அவனுக்கு மூச்சே அடங்கிவிடும் போலிருந்தது.

அந்தக் கொடூர கொள்ளிவாய்ப்பிசாசுகள் யாவும் ஆளுக்கொன்றாய் அடித்துப் பிடித்துக்கொன்டு அந்த நகைகளை மாட்டிக்கொன்டு ஆர்ப்பரித்து ஆரவாரமாய் கும்மாளமிட்டன. "மேலு காதும் குத்தல, மூக்கு அதுவும்   குத்தல, தானா துலங்குதடி தட்டுவாணி பித்தள " என இன்னும் ஏதேதோ சொல்லி ஆட்டம் போட்டன அந்த அரசமரத்துப் கொள்ளிவாய்ப்பிசாசுகள்.

வெள்ளி முளைக்க ஆரம்பித்தவுடன், எல்லா பிசாசுகளிடமும் இருந்த நகைகளை எல்லாம் ஒரு கொள்ளிவாய்பிசாசு பிடுங்கி அதே பொந்தில் மறைத்து வைத்து விட்டு , யாவும் காட்டுக்குள் ஓடி மறைந்து போயின.

பொழுது புலர்ந்தது. யாவற்றையும் ஒன்று விடாமல் கவனித்துவந்த ரங்கன். மரத்திலிருந்து இறங்கி ஓடிப்போய் தலையாரியையும் தோட்டத்து மக்களையும் தான் கண்டதைக்கூறி அழைத்து வந்தான்.

கொஞ்சம் மந்திரம் மாயம் கற்ற தலையாரி சில மந்திர உச்சாடணங்கள் செய்து மரப்பொந்திலிருந்த நகைப்பொட்டலத்தை எடுத்து ரங்கனிடம் சேர்ப்பித்தார், பின்னர் சில ஆண்கள் ஒன்றுகூடி அந்த மரத்தை தீவைத்து கொளுத்தி சாம்பலாக்கிவிட்டு வீடுதிரும்பினர்.

நகை மீண்டதில் இருளாயிக்கு மெத்த சந்தோக்ஷம். ரங்கனின் வீர‌த்தையும் சாமார்த்தியத்தையும் பாட்டாய் பாடி அக மகிழ்ந்தாள். தலையாரி சொல்லித்தந்தபடி அன்றே அவளை அழைத்துக்கொன்டு நகையையும் எடுத்துக்கொன்டு பத்து நாளைக்கு பக்கத்து தோட்டத்தில் தன் தங்கை வீட்டுக்கு பயணப்பட்டான் ரங்கன்.

அந்த இரவு நடுச்சாமம் கடந்தது, தோட்டம் விழித்துக்கொன்டு மெளனம் காத்தது. அனைவரும் வீட்டுக்குள்ளே தூக்கமின்றி உன்னிப்பாய் கேட்க, அந்த ஆலமரம் எரிந்து போன தோப்பிலிருந்து பெரும் ஓலங்களும் அலரல்களும் தோட்டத்தையும் அதிரவைத்தன‌....!



 












 
       


 












 











திங்கள், 29 ஜூன், 2015

தேன் சாகரத்தில் சிறுதேனீயின் அநுபவம் மூன்று - ‍ பார்த்திபன் கனவு



கல்கி எனும் மாபெரும் எழுத்து ஆளுமையின் அற்புதப்படைப்பாக வெளிவந்த "சிவகாமியின் சபதம்" புதினத்தைத்தொடர்ந்து அமைவதாக வடிக்கப்பட்டிருக்கிறது பார்த்திபன் கனவு எனும் இப்புதினம்

இப்புதினம் ஒரு சோழமன்னனின் சுதந்திர வேட்கையும் அதற்காக அம்மன்னனின் இளவல் நிகழ்த்தும் போராட்டங்களாகவும் தாங்கி மலர்ந்து வீரம், காதல், தியாகம், பெருந்தன்மை, அரசியல், சாணக்கியம், சதித்திட்டங்கள், நரபலி என எண்ணற்ற பாதைகளில் பயணம் செய்கிறது.

1944-1946 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வீரமும், கலையும் சிங்கார நர்த்தனமிடும் சிந்தையைக்கவர்ந்த "சிவகாமியின் சபதம்" புதினம் வெளிவருவதற்கு முன்பாகவே 1941-1943 ஆண்டுகளில் கல்கி இதழில் தொடராக வெளிவந்த புதினம் "பார்த்திபன் கனவு". இப்புதினம் இதே தலைப்பில் நடிகர் ஜெமினிகணேசன் நடித்து 1960 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியீடு கண்டுள்ளது.

ஏற்கனவே பேரழ‌கியும், அற்புத ஆடலரசியுமாகிய சிவகாமி தேவியின் சபதத்தைத் தமிழ்ப்பூங்காவில் நாம் கண்டோம். இங்கே . இனி அரசர் பார்த்திபனின் அந்தராத்மாவில் இடங்கொன்டு சுதந்திரப் சோழப் பேரரசுக்கு வித்தாக அமைந்திட்ட அந்த "பார்த்திபன் கனவு" தனைக் காண்போம் வாரீர்.

இப்புதினம் மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு முதல் பாகம் (10 அத்தியாயங்கள்), இரண்டாம் பாகம் (27 அத்தியாயங்கள்) மற்றும் மூன்றாம் பாகம் (40 அத்தியாயங்கள்) என படைக்கப்பட்டுள்ளது.

இக்கதையின் கதாநாயகன் சோழ இளவரசன் விக்கிரமன். மேலும் முக்கிய கதாமாந்தர்களாக பல்லவப் பேரரசர் நரசிம்மவர்மன், சோழ அரசர் பார்த்திபன், அரசி அருள்மொழித்தேவி, அரச விசுவாசியான படகோட்டி பொன்னன், பொன்னன் மனைவி வள்ளி, விக்கிரமனின் சிற்றப்பனாகிய மாரப்ப பூபதி, பல்லவ இளவரசி குந்தவி, மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் ஆகியோருடன் மேலும் பலர் வலம்வருகின்றனர்.

கதைச்சுருக்கம் : சோழ அரசு, பல்லவ அரசுக்கு கப்பம் கட்டி வரும் காலம். அப்போதைய சோழ மன்னர் பார்த்திபனுக்கு மாபெரும் சுதந்திரச் சோழப் பேரரசை நிறுவும் கனவு சிந்தையை ஆக்ரமிக்கிறது. தமது கனவை சித்திரக்குகையில் ஓவியங்களாக வரைந்து யாருமறியாமல் பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சுதந்திரம் கோரி பல்லவப் பேரரசுடன் போர் புரிய ஆயத்தமாகிறார் மன்னர் பார்த்திபன். தாம் போருக்குப் புறப்படும் முன் தமது இளவலாகிய விக்கிரமனை அழைத்து சித்திரக்குகையிள் தாமே வரைந்த சித்திரங்களைக் காண்பித்து சுதந்திர சோழப் பேரரசை நிறுவும் தமது உள்ளக்கிடக்கையை இளவரசனிடம் வெளிப்படுத்தி தமது ஆசையை நிறைவேற்றும்படி அறிவுறுத்துகிறார்.

தமது துணைவியாகிய அரசி அருள்மொழித்தேவியிடம் ஒரு பெட்டகத்தைக்கொடுத்து அதில் சுதந்திரச் சோழ நாட்டை ஆண்ட தமது முன்னோர்கள் உபயோகித்த வாளையும், திருவள்ளுவர் கைவண்ணத்தில் உருப்பெற்ற திருக்குறளையும் விக்கிரமன் சுதந்திர மன்னனான பின்னர் அவனிடத்தில் சேர்ப்பிக்கும்படி அறிவித்துவிட்டு போருக்குச் சித்தமாகிறார்.

இதன் தொடர்ச்சியாக பார்த்திப மன்னன் ப‌ல்லவப்பேரரசுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தி  போருக்குத் தயாராகிறார். பார்த்திப மன்னர் போரில் தோல்வியைத்தழுவுகிறார்.  மாபெரும் வீரரான நரசிம்மவர்மனை எதிர்த்து போர் புரிந்து வீரமரணம் எய்துகிறார். உயிருக்குப் போராடும் கடைசி நொடிகளில் தன்னை நாடி வரும் ஒரு சிவனடியாரிடம் தமது இளவல் விக்கிரமனை சுதந்திர சோழ அரசின் ம‌ன்னனாக்க உதவும்படி சத்தியம் வாங்கிக்கொன்டு உயிரை விடுகிறார். அதன் தொடர்பில் சிவனடியார் அருள்மொழித்தேவிக்கும், இளவரசன் விக்கிரமனுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு அவர்களை வழி ந‌டத்துகிறார். எனினும் கோழையும் துன்மார்க்கனுமாகிய மாரப்ப பூபதி  சோழ அரசை கைப்பற்ற சதித்திட்டங்கள் இயற்றுகிறான்.

ஒரு கட்டத்தில் தமது சிற்றப்பன் மாரப்ப பூபதியின் துர்போதனையால், பல்லவ அரசுக்கு எதிராக சுதந்திர சோழ அரசை நிறுவும் அவசர‌முயற்சியில் ஈடுபட்டு விக்கிரமன் கைது செய்யப்படுகிறான். பல்லவ வீதியில் கைதியாக அழைத்து வரப்படும் விக்கிரமனைக் கண்டு இளவரசி குந்தவி அவனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். அவள் தந்தை நரசிம்ம பல்லவர் விக்கிரமனை விசாரித்து சென்பகத்தீவிற்கு நாடு கடத்துகிறார். கப்பலில் கொன்டு செல்லப்படும் முன் விக்கிரமனை நாடி குந்தவி ஓடி வருகிறாள். அங்கே சிவனடியாரும் காட்சி தந்து கையை உயர்த்தி விக்கிரமனை ஆசிர்வதித்துவிட்டு, தம்மை கண்டறிய தேடி வந்த  குந்தவியிடம் அகப்படாமல் மறைந்துவிடுகிறார்.

சிவனடியார் மகனைப் பிரிந்து துக்கத்தில் வாடும் அருள்மொழித்தேவியை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விக்கிரமன் , குந்தவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதில் ஈர்ப்பு கொன்டிருப்பதை அவர் அரசியிடம் தெரிவித்து தாயற்ற குந்தவியை ஏற்று அன்பு செலுத்தும்படி அறிவுறுத்துகிறார்.

பல்லவ மன்னரும், குந்தவியும், சிறுத்தொண்டர், அவர் துணைவியார் ஆகியோருடன் சோழ நாட்டிற்கு வருகின்றனர். குந்தவி அருள்மொழித் தேவியை சந்திக்கிறாள். இருப்பினும் இருவரும் மனம் விட்டுப் பழக இயல‌வில்லை. மகனை பிரிந்த வேதனையில் வாடும் அருள்மொழித்தேவி சிறுத்தொண்டர், அவர் துணைவியார் ஆகியோருடன் தல யாத்திரை மேற்கொள்ள புற‌ப்படுகிறார். வழியில் அவர் கடலில் மூழ்கி, கபாலிக தலைவனால் கடத்தப்பட்டுவிடுகிறார்.

நாடு கடத்தப்பட்ட விக்கிரமனை சென்பகத்தீவு மக்கள் அன்புடன் ஏற்று அத்தீவின் மன்னாக பிரகடனப்படுத்துகின்றனர். அத்தீவு அச்சமயம் அரச வாரிசுகளற்றுப் போயிருந்தது. சுத்ந்திர மன்னனான பின்னும் தன் தாயையும், தான் பல்லவ வீதியில் மனதைப் பறிகொடுத்த பெண்ணையும் எண்ணி மனதுள் மருகுகிறான் மன்னன் விக்கிரமன்.

நவரத்தின வியாபாரியாக வேடமணிந்து மீண்டும் நாடு திரும்புகிறான்.
வழியில் ஒற்றர் தலைவ‌ர் ஒருவரால் தம்மைத் தாக்க வந்த கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டு, அவரிடமிருந்த குதிரை ஒன்றை பெற்றுக்கொன்டு தாய் நாடு நோக்கி புறப்படுகிறான். வழியில் காட்டாற்று வெள்ளம் ஒன்றில் சிக்கிக் கொள்ள படகோட்டி பொன்னனால் காப்பாற்றப்படுகிறான். எனினும் கடும் சுரத்தால் பாதிக்கப்பட்டு அவ்வழி வந்த இளவரசி குந்தவி கோக்ஷ்டியினரால் காப்பாற்றப்படுகிறான்.

சுரத்திலிருந்து மீண்ட‌ விக்கிரமன் பொன்னன் வழி அவன் தாய் அருள்மொழி கபாலிகத் தலைவனால் கடத்தப்பட்டதையறிந்து அவரை மீட்க பொன்னனுடன் புற‌ப்படுகிறான். அவனை அடையாளம் கண்டுகொன்ட மாரப்பபூபதி அவனை கைது செய்து காளி தேவிக்கு பலி கொடுக்க கபாலிகர்களிடம் ஒப்படைக்க முயல்கிறான். இருந்தாலும் பொன்னன் தன் சாதுரியத்தினால் விக்கிரமனை காப்பாற்றிவிடுகிறான்.

இவ்வாறாக தேடல்களும் , பூசல்களும் தொடர, பல்வேறு போராட்டங்களுக்குப்பின் இறுதியாக கபாலிகத் தலைவனிடமிருந்து தப்பித்த அரசி அருள்மொழி தமது மகன் விக்கிரமனைச் சந்திக்கின்றார். அங்கிருந்த குள்ளன் கூறிய செய்தியின் வழி மன்னர் நரசிம்மவர்மரை பலி கொடுக்க கபாலிகத் தலைவன் பிடித்து வைத்திருக்கிறான் என்பதையறிந்து விக்கிரமன் நரசிம்மவர்மரைக் காப்பாற்றுகிறான். சதிகாரர்கள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுகின்றனர். சிறுத்தொண்டர் அங்கே வந்து அனைவருக்கும் உண்மையை விளக்கி நிலைமையைச் சரிசெய்கிறார்.

கபாலிகத்தலைவனின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. மன்னன் புலிகேசியின் தமையனும் , சிவகாமியின் சபதம் புதினத்தில் புத்தபிட்சு நாகநந்தியாக வந்து வில்லத்தனங்கள் புரியும் நீலகேசியே கபாலிகத்தலைவன் என்று அனைவரும் உணர்ந்துகொள்கின்ற‌னர். நாட்டின் நிம்மதியைச் சீர்குலைக்க. ஏற்படுத்தப்பட்ட நரபலிச் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.

மன்னரைக் காப்பாற்றியதால் இளவரசன் விக்கிரமன் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறான். சுதந்திர சோழ நாட்டின் மன்னனாக பிரகடனம் செய்யப்படும் விக்கிரமனுக்கு குந்தவி மாலையிடுகிறாள்.

தமது தந்தையின் கனவை நிறைவேற்றிய இள‌வரசன் விக்கிரமன் அவர் பாதுகாத்த சுதந்திர சோழ நாட்டு அரசனுக்குரிய பொக்கிக்ஷமாகிய வீரவாளையும், திருக்குறளையும்  தமது உடமையாக்கிக் கொள்கிறார்.

இத்தனை செயல்களுக்கும் ஆதரவாகவும், தூண்டுகோலாகவும் விளங்கிய அந்த சிவனடியார் யாரென்பதை இறுதியில் உணர்த்துகிறார் கல்கி. மாயத்திரை அகல, மர்ம முடிச்சுகள் அவிழ அவர்...
அவர்......    
.
.
.
.
.
.
.
..
...
....
யாரென்பதை அறிந்திராதவர்கள் இப்புதினத்தை வாசித்து அறிந்து கொள்ளவும்..... :)  தேடல் என்ற‌ ஒன்றுதான் வாழ்க்கை பயணத்திற்கு சுவை சேர்க்கும், தங்களின் வாசிப்புத் தேடல் தொடங்கட்டும், தொடரட்டும்...
 




புதன், 17 ஜூன், 2015

உங்க காலை வெட்டிரலாமா சார் ?


நடிகர் விஜயகாந்த் நடித்த "ரமணா" திரைப்படத்தில் ஒரு மருத்துவமனைக்காட்சி, இறந்து போன‌ ஏழை ஒருவரை தனியார் மருத்துவமனையில், உயிருக்குப் போராடுகிறார் எனக்கூறி மருத்துவமனையில் சேர்ப்பார் கேப்டன். அவரிடம் அந்த மனிதர் இறந்து போனதற்கான அரசாங்க அத்தாட்சி கைவசமிருக்கும். அதை அறியாத அந்த தனியார் மருத்துவமனையினர் நிகழ்த்தும் நாடகங்களைக் கண்டு இறந்தவரின் மனைவி மட்டுமல்ல நாமும் அதிர்ச்சியாகிவிடுவோம்.

இப்படியாக மக்களிடமிருந்து முடிந்த மட்டிலும் பணத்தைக் கறக்க தனியார் மருத்துமனைககள் நிகழ்த்தும் சாகசங்களை பக்கம் பக்கமாக எழுதலாம், பண‌த்திற்காக அவர்கள் பாமரர்களை படுத்தும்பாடு வார்த்தைகளில் வசப்படுவதில்லை. எப்படியிருந்தாலும் பல சமயங்களில் அஜாக்கிரதையின் உறைவிடமாய் திகழும் பொது மருத்துவமனைகளைவிட, உடனடி நிவாரண‌ம் தேடி மக்கள் அடைக்கலமாவது தனியார் மருத்துவமனைகளே.

இந்த தனியார் மருத்துவமனைகளின் புண்ணியத்தாலேயே நாட்டில் காப்புறுதி நிறுவனங்கள் கொழுத்துப்பெருக்கின்றன. மக்கள் காப்புறுதி, மெடிக்கல் கார்ட் என சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்கின்றனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவம் வெற்றியடையா பட்சத்தில் இதற்கு மேல் எங்களால் முடியாது நீங்கள் பொது மருத்துவமனைக்கு கொன்டு செல்லுங்கள் எனக் கூறிவிடுவர். தோற்றுப்போன தங்கள் சிகிச்சைக்கும்  கொஞ்சமும் வெட்கமோ, மனசாட்சியோ இல்லாமல் மொத்த மருத்துவ செலவையும் வசூலித்துவிடுவர்.

உயிர் மிச்சமிருக்கும் நோயாளி மீண்டும் வேறொரு தனியார் மருத்துவமனையையோ அல்லது கையில் பசை தீர்ந்துவிட்டால் பொது மருத்துவமனையையோ நாடுவதுதான் வாடிக்கை.

அந்த மனிதருக்கு பிராயம் 60க்கு மேலிருக்கும், ஒரு விபத்தில் சிக்கி மனைவி மக்களால் அந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பருத்த அஜானுபாகுவான தோற்றம் கொன்ட அவருக்கு கழுத்தில் விபத்து (hairline crack ) ஏற்பட்டிருந்தது. படுத்த படுக்கையாய் கழுத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் அவர் உடலில் நீர்பிரியாத நிலை ஏற்படவே, மருத்துவர்கள் அவருடைய ஒரு காலில் மூன்று நீளமான காயங்களை ஏற்படுத்தி நீர்வடியச் செய்தனர். தொடர்ந்த சிகிச்சையில் கழுத்து குண‌மாகியது, ஆனால் காலில் செயற்கையாய் ஏற்படுத்திய அந்தக் காயங்கள் மிகவும் பெரிதாகின. முழங்காலுக்குக் கீழ் முக்கால்வாசியை அகன்ற செந்நிற காயங்கள் ஆக்ரமித்து அவதிப்படுத்தத் துவங்கின. தனியார் மருத்துவமனை ஆன செலவைக் கணக்குப்போட்டு கறந்துகொன்டு மேற்கொன்டு சிகிச்சை அளிக்க முடியாது என‌ கைவிரித்துவிட்டது, கவலையுடன் குடும்பத்தினர் பொது மருத்துவமனையில் அந்த மனிதரை கொன்டு வந்து சேர்த்தனர்.

பொது மருத்துவமனையில் பகலில் அவருடைய மனைவி அவருக்கான உதவிகளையும் இரவில் அவர‌து புதல்வர் அவருடன் தங்கியும் அவரைக் கவனித்துக்கொன்டனர்.

நாட்கள் நகர்ந்தன, அவருடைய கால் புண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் சீனர். அவருக்கு அந்த மனிதரை அங்கிருந்து வெளியேற்றவும் அடிக்கடி தமது புண்களுக்காக அவர் மருத்துவமனை சிகிச்சையை நாடாமல் இருக்கவும் ஒரு வழி புலப்பட்டது. அந்த மனிதரின் காலை முழங்காலோடு வெட்டி எடுத்துவிடுவது என்பதுதான் அது..! அதை நிறைவேற்ற இன்னொரு இந்திய மருத்துவரை வைத்து கூட்டு ஆலோசனை நடத்தினார். ஒரு தமிழனின் கழுத்தை அறுக்க இன்னொரு தமிழனை உபயோகிக்கும் திற‌மை அந்த மருத்துவருக்கு தெரிந்திருக்கின்றது.

என்ன கொடுமை...!  அந்த பெண் மருத்துவரும் அதற்குச் சம்மதித்தார். நோயாளிகளின் அங்கங்களை துண்டிப்பது மருத்துவத்தில் ஒன்றும் புதிதல்ல ஆனால் அது முற்றிய நீரிழிவு நோயாளிகளுக்கும் முற்றாக உறுப்புகள் சிதைந்தவர்களுக்குமே பொருந்தும்.  காயங்களுக்கெல்லாமா காலை வெட்டி எடுப்பது ?

அவர்களின் திட்டப்படி அந்த பெண் மருத்துவர்,  நோயாளியின் பிள்ளைகள் யாரும் அருகில் இல்லாத சமயத்தில், சர்வ‌ சாதாரண‌மாய் கைலி அணிந்து வெற்றிலை போட்டுக்கொன்டு நோயாளிக்கு சிருஷைகள் செய்துகொன்டிருக்கும் அவர் மனைவியை அணுகி பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார்.

அந்த மருத்துவர் தன் முன் காட்சியளித்த அந்த 50 வயது பெண்மணியை படிக்கத்தெரியாத பாமரப் பெண்மணி, தமது ஏற்பாடுகளுக்கு எளிதில் இண‌ங்கிவிடுவார் என முடிவு செய்து கொன்டார், அவர் அறியாதது என்னவென்றால் அந்தப் பெண்மணி ஒரளவு படிக்கத்தெரிந்தவர் கூடவே நிறைய உலக அனுபவமும் சாதுரியமும் மிக்கவர் என்பது.   

டாக்டரம்மா அந்தப் பெண்மணியிடம் பேச ஆரம்பித்தார், தமிழில் "அம்மா என ஆரம்பித்து, உங்கள் கணவர் அளவுக்கு மீறி குடித்து உடலெல்லாம் விக்ஷமாகிப் போய்விட்டது, இவர் கால் புண்கள் என்றுமே ஆறப்போவதில்லை, அவர் உயிருக்கும் ஆபத்து வந்துவிட்டது எனவே அவர் முழங்காலை துண்டித்துவிட்டால் உயிர் காப்பாற்ற‌ப்பட்டு எல்லாச் சிரமங்களும் தீர்ந்துவிடும், அறுவைச்சிகிச்சைக்கு இந்தப் பாரத்தில் ஒப்புதல் கொடுங்கள் என லாவகமாக தமது வழிக்கு கொன்டுவரப்பார்த்தார். நீங்கள் சம்மதித்துவிட்டால் இன்று இரவே காலை துண்டித்துவிடலாம், அவசரப்பட்டார் டாக்டர், இதில் அவருக்கு என்ன ஆதாயமோ புரியவில்லை, ஆனால் நிச்சயமாக அது நோயாளியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல.

அவர் கூறியதை மிகவும் கவனமாகக் கேட்ட அந்தப் பெண்மணி ஒருகண‌ம் திகைத்தார். காரணம் அவர் கணவர் மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ வேறெந்த தீயப் பழக்கங்களும் இல்லாதவர். முந்தைய சிகிச்சைகளின் வழி திட‌காத்திரமான அவருக்கு நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற எந்த நோய் பிரச்சனைகளும் இல்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

உடனே அந்தப் பெண்மணி நான் என் குழந்தைகளுடன் பேசி முடிவு செய்கிறேன் எனக்கூறி முடிவாக ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் சிலமுறை வற்புறுத்திவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள் அந்த மருத்துவர்.

அதன் பின்னர் மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு கண‌மும் அந்தப் பெண்மணிக்கு நெருப்பாய் தகிக்க ஆரம்பித்தது. உடனே கையிலிருந்த சில்லரைகளை கொன்டு பொதுத் தொலைபேசி வழி மகனுக்கு நடந்ததைத் தெரிவித்து உடனே புறப்பட்டு வரச் செய்தார். மகன் வழி மற்ற பிள்ளைகள் உற‌வினர்கள் என அனைவருக்கும் செய்தி தீயாய் பரவ, கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துவமனையின் ஆண்கள் பிரிவுக்கு முன் கூட்டம் கூடிவிட்டது.

அந்தக் குடும்பத்து ஆண் மக்கள் அந்த சீன டாக்டரை முற்றுகையிட்டு ஆரவாரமாக கேள்விக்கனைகள் தொடுக்க, நடுங்கிப்போன டாக்டர் நாக்குழறி தடுமாறியது அவன் செயலின் அநியாயத்தைச் சொல்லாமல் சொல்லியது. கடும் எச்சரிக்கையுடன் அந்த டாக்டரை விட்டுவிட்டு அவர்கள் நோயாளியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துச்சென்ற‌னர். தொடர்ந்த சொந்த சிகிச்சைகளிலேயே முற்றாகத் தேறி இன்று காயத்தின் தழும்புகள் மட்டுமே எஞ்சியிருக்க ஆரோக்கியமாக வலம் வருகிறார் அந்தப்பெரியவர்.

காலை வெட்டியிருந்தால் கடைசிக்காலம் வரை அந்த மனிதர் எத்துனை அவதிகள் பட்டிருப்பார் ? மனைவியின் துரித நடவடிக்கையால் அன்று அவர் தப்பித்தார். சும்மாவா சொன்னார் தெய்வப்புலவர்...

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

என்று....

அழகான வாசமலர்களிடையே கொடிய பூநாகங்கள் குடியிருப்பதைப் போல நல்ல மருத்துவர்களிடையே இதுபோன்ற பிற‌ர் நலம் கருதா தீயகுணமிக்க மருத்துவர்களும் இருப்பது வேதனையே.....  






 

  


   





ஞாயிறு, 14 ஜூன், 2015

சொல்வேந்தர் சுகி.சிவம் கொடுத்த பதிலடி




"மோனமாகிறபோது ரமணராகவும் கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பு" ‍என்று தன்னைப் பற்றி விவரிக்கும் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் உரைகளை செவிமடுத்தவர்கள் அவரின் கூற்றிலுள்ள உண்மையை நிச்சயம் மறுதலிக்கமுடியாது.


கலைமாமணி விருது பெற்ற சுகி.சிவம் அவர்கள்  நாவன்மை மிக்கவர். சுவாரசியமாக உரையாற்றக்கூடியவர், சிற‌ந்த எழுத்தாளர். ஆழமான விக்ஷயங்களையும் மிகவும் எளிதாக மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துச்சொல்லக்கூடிய திற‌மைசாலி.

புராதணம், புராணம், வேதம், ஆகமம், மதம், இறை, மனித வாழ்வு நெறிகள் குறித்த இவரது விரிவான  விள‌க்கங்கள் மனிதம் விலகி கணிணி வாழ்வுக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் இன்றைய மாந்தர்களுக்கு மிகமிக அவசியமானவையாகும். இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிப்பீடியாவில் உள்ள இந்தப் பதிவு உதவும் http://ta.wikipedia.org/wiki/சுகி._சிவம்

இவரின் உரைகளையும், நூல்களையும் ஓரளவு படித்ததுண்டு, இவரின் நேர்த்தியான கருத்துகளைக் கேட்டும், படித்தும் வியந்ததுண்டு. அவை யாவற்றையும் மீறி ஒரு சிரிப்பும் தோன்றுவதைத் தடுக்க முடிவதில்லை, அதற்குக்காரண‌ம் ஒன்று உண்டு....

சிங்கையில் வாழ்ந்த காலம், அப்போது சிங்கையின் பிரபலமான ஒரு அரங்கில் ஒரு நடிகரின் நூல் வெளியீட்டு விழாவும், சில பிரமுகர்களின் இலக்கியப் பேருரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொன்ட சிங்கையைச் சேர்ந்த‌ தோழி ஜைனாப் பேகமும் அந்த நிகழ்வில் கலந்து கொன்டோம்.


ப‌ட்டிமன்ற ஆசான் திரு.சாலமன் பாப்பையா அவர்களும், ஒரு பிரபல கவிஞரும், திரு.சுகி.சிவம் அவர்களுமே அந்த நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்த பேருரையாளர்கள், சாலமன் பாப்பையா ஐயா வந்து அருமையாக பேசிவிட்டு சென்றார்.

அவருக்குப்பின் புகழ்பெற்ற அந்தக் கவிஞர் மிடுக்காக எழுந்தார், ராஜ நடை நடந்து ஒலிப்பெருக்கியை நெருங்கினார். தனக்கேயுரிய பாணியில் பேசினார், பேசினார், பேசிக்கொன்டே இருந்தார். :)

நேரம் கடந்து கொன்டிருந்தது, கூட்டம் பரிதாபமாக விழித்துக்கொன்டிருந்தது. நாமும்தான் ! சுகி.சிவம் அவர்கள் அமைதியாக யாவற்றையும் பார்த்துக்கொன்டிருந்தார். கவிஞர் பேச வேண்டிய தலைப்பில் காதல் என்ற‌ வார்த்தை இருந்தாலும் இருந்தது, அது அவர் வாயில் சிக்கி படாதபாடு
ப‌ட்டுக்கொன்டு தவித்தது.  :) ஆனால் கவிஞரோ நகைச்சுவையாகப் பேசுகிறோம் என நினைத்துக்கொன்டு காமத்தை வாரி வாரி வார்த்தைகளில் வழியவிட்டுக்கொன்டிருந்தார்.

காதல் குறித்து புதிய கண்ணோட்டத்தில் பலப்பல‌ பொன்மொழிகளை உதிர்த்தார்...!? அதில் ஒரு வரி " நாற்பதிலும் ஒருமுறை காதல் வரும், சேலை தேடச் சொல்லும் ,ரசித்துப்பார்" எனும் தொனியில்....!  

கூட்டத்தினரை அவர் உரையால் படாத பாடு படுத்திவிட்டு அவர் பேருரையை! முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார், அதற்குள் நேரம் வெகுவாக கடந்துவிட்டிருந்தது. அடுத்துப் பேச சுகி சிவம் அவர்கள் ஒலிப்பெருக்கியை நெருங்கினார். அதற்குள் ஏற்கனவே கேட்ட பேருரையால் மெர்சலாகிப் போயிருந்த மக்களில் பலர் நாளைக்கு வேலை எனும் சாக்கோடு எழுந்து புறப்பட ஆரம்பித்தனர்.

சிகி.சிவம் சுற்று முற்றும் தமது பார்வையை ஓடவிட்டார். தமது ஆழமான கணீரென்ற குரலில் "ஒரு மனிதனுக்கு 20 வயதில் காதல் வரவில்லையென்றால் அவனுக்கு உடலில் பிரச்சனை, ஒரு மனிதனுக்கு நாற்பது வயதிலும் ஒரு காதல் வருகிறதென்றால் அவனுக்கு மனதில் பிரச்சனை" என்று போட்டார் பாருங்கள் ஒரு போடு !(நிச்சயமாக இது திருமணமானவர்களுக்குத்தான்)

அவ்வளவுதான் !  அதுவரை தூங்கி வழிந்த அரங்கமே சடாரென விழித்துக்கொன்டதுபோல் அப்படி ஒரு ஆரவாரமும்  கரவொலியும் அப்பொழுது அங்கே எழுந்தது, அவருக்கு முன் பேசிய கவிஞர் முகத்தில் ஈயாடவில்லை. வீடு திரும்ப எத்தனித்து எழுந்தவர்களும் அப்படியே அமர்ந்து மிகவும் சிறப்பாக அமைந்த அவர் உரையை முழுதாகச் செவிமடுத்த பின்னரே கலைந்து சென்றனர்.

இன்றும் அவரின் சாதுரியமும், சாமர்த்தியமும் மிளிரும் பேச்சுக்களை மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு எனினும். அன்று அவர் அந்தக் கவிஞ‌ருக்குக் கொடுத்த பதிலடி இருக்கிறதே, அது இன்றும் நினைவில் நின்று சிரிக்க வைக்கின்றது...! சொல்வேந்தர் சொல்வேந்தர்தான்....!

சுகி.சிவம் க்கான பட முடிவு
 


  பி.கு : கவிஞரின் பெயரை இங்கே குறிப்பிடாவிட்டாலும் பலர் அவர் யாரென்பதை யூகித்திருக்கக்கூடும். சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பதால் எனக்கும் அவரைப்பிடிக்கும். அன்றைய அவரது உரையைத்தவிர :)


   




செவ்வாய், 2 ஜூன், 2015

டாக்டர் ஜேபி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி



2/6/2015 செவ்வாய், ஜேபி என அனைவராலும் நட்புடன் அழைக்கப்பட்ட கடாரப் பேரறிஞர் டாக்டர்.எஸ்.ஜெயபாரதி அவர்கள் இன்று காலை தமது 74ம் அகவையில் இறைவனடி எய்தினார். இச்செய்தியை ஜேபி அவர்களின் புதல்வி பைரவி ஜேபியின் தமிழ், ஆங்கில முகநூல்கள் வ‌ழி தெரியப்படுத்தியிருந்தார்.

டாக்டர் ஜேபி சின்னமுத்து பிள்ளை அவர்களுக்கும் அழகுரெத்தினம் அம்மாளுக்கும் 1941 ஆம் ஆண்டு பிற‌ந்தார். இவர் தந்தையார் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, நேதாஜி சுபாக்ஷ் சந்திரபோஸ் அவர்களுக்கும் அறிமுகமானவர் என அறியப்படுகிறது.

திருமதி சந்திராவை வாழ்க்கைத் துணைவியாகக் கொன்ட ஜேபி அவர்களுக்கு சுகானந்த பாரதி எனும் புதல்வரும் அழகுரெத்தினம் பைரவி எனும் புதல்வியும் உள்ளனர்.

மருத்துவத்துறையில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜேபி சுங்கைப்பட்டாணி பொது மருத்துவமனையில் இயக்குனராக பணியாற்றிவர். தமிழ் இலக்கியங்கள், தமிழினத்தின் பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொன்ட சிறந்த வரலாற்று ஆசிரியரும், தேர்ந்த பேச்சாளருமாவார்.

சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி என பெருமையுடன் அழைக்கப்பட்டவர் ஜேபி. தமிழ் இலக்கியங்கள், தமிழர்களின் தொன்மையான இனம், மதம், கலாச்சாரம், பாரம்பரியம் வானவியல் சாஸ்திரம் சார்ந்த அவரின் ஆய்வுகளும் அதன் முடிவுகளும்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் இவை குறித்த பல்வேறு கட்டுரைகளை மலேசியப் பத்திரிக்கைகளில் எழுதி வந்துள்ளார். (ஆதாரம் : ஜேபி அவர்களின் பதிவுகள்)


பன்முகத்திறனாளர் எனவும் நடமாடும் பல்கலைக்கழகம் எனவும் வர்ணிக்கப்படும் கல்விமானாகிய ஜேபி அவர்கள் ஆழ்ந்த வாசிப்பாளருமாவார். இவரின் சேமிப்பில் பல்துறை சார்ந்த 5000 புத்தகங்கள் வரை வைத்திருந்தவர். அவற்றுள் மிகவும் அரிய புத்தகங்களும் அடங்கும்

DrJaya Barathiஇணையத்தளங்களில் ஜேபி அவர்களின் ஆளுமை மிகப்பெரிது. கீழ்க்காணும் வலைத்தளங்கள், மடலாடல் குழுக்கள் வழி 9000 வரை கலை, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், மதம், வேதம், ஆகமம் குறித்த தமது ஆய்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்திருக்கிறார். கலை, இசை ஆகிய துறைகளிலும் அபார ஆர்வம் வாய்ந்தவர் ஜேபி.


இவர் பண்டைய மலாய் நாகரீகத்தின் ஆய்வுக்கும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் என அறியப்படுகிற‌து.  இதன்வழி உலகோர் அறிந்திரா மிக மிக நுட்பமான, பயன்வாய்ந்த தகவல்களையும் மக்களிடம் பகிர்ந்துள்ளார். மக்கள் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் மிகப்பெரிய கல்விக் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் ஜேபி.

கீழ்க்காணும் அவருடைய பதிவுகள் அவர் உலகுக்கு விட்டுச்சென்ற கல்விப் பெட்டகங்களாகும்.

http://groups.yahoo.com/group/agathiyar/
http://www.treasurehouseofagathiyar.net/
http://www.visvacomplex.com/
http://www.skandaweb.com/
http://jaybeestrishul11.blogspot.com/
http://jaybeesmuseumtamil.blogspot.com/
http://jaybeetrident.blogspot.com/
http://jaybeemuseum-e.blogspot.com/
http://jaybeesnotebook.blogspot.com/
http://jaybeeskadaram.blogspot.com/
http://kadaaramweb.blogspot.com/
http://www.chandraweb.net

இவரைப்பற்றி எழுதுவதற்கு இன்னும் நிறையவே உள்ளன. சமயம் வாய்த்தால் இன்னும் நிறைய எழுதும் எண்ணம் உண்டு, ஒரு நல்ல நண்பராகவும் ஆசானாகவும் எனது முதல் மரியாதைக்கு உரியவர் டாக்டர் ஜேபி அவர்கள். ஒரு ஆசானின் நிலையிலிருந்து ஜேபி போதித்தது அதிகம். இவரிடம் ஒருங்கே பாராட்டும் திட்டும் பெற்றது எனது பாக்கியமே.

Jay Beeவாழும் காலத்தில் இந்த மாமேதை தாம் அடையவேண்டிய அங்கீகாரங்களை அடையவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறிய விடயமே, அஞ்ஞான மாயையகற்றி, ஞானஒளி பரப்பிய அறிவொளி ஆசானாகிய இவர் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. அன்னாரை இழந்து துயரும் குடும்பத்தினர்க்கும், அவரின் ஆயிரமாயிரம் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


ஆக்கம்
சிவனேசு,
2/6/2015

திங்கள், 1 ஜூன், 2015

மலைக்காட்டு மர்மம்

இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான இடம். உயர்ந்த மலைகளைப் பற்றிப் படர்ந்த பசுமையான காடு, காட்டை நிறைத்திருந்தன பல நூறு வருடங்களைத் தாண்டிய பல பெரிய பெரிய இராட்சத மரங்கள். இருகைகளால் இணைத்துப் பிடிக்க முடியாத  அகன்ற தண்டுகளுடன், அதன் கிளைகளோ பாசிபடிந்து ஒட்டுன்னிக‌ளின் உறைவிடமாய் பூமியை தொட்டுக் கொன்டிருந்தன. அந்த மலைக்காட்டில் அமைந்திருந்தது இயற்கையின் எழில் நடனமாய் காணும் போதே குளிர்ச்சியூட்டும் ஓர் அழகான நீர்வீழ்ச்சி..!

உயர்ந்த மலையிலிருந்து பொங்கிப் பெருகி நுரைகள் பளீரிட பாலைப்போல மலையிலிருந்து குதிதோடி வந்து குளிரூட்டியது அந்த நீர்வீழ்ச்சி. பளிங்கு போன்று மிக மிக சுத்தமான நீர். அந்த நீர்வீழ்ச்சி அருகாமையிலிருந்த குடியிருப்பாளர்களுக்கு ஒரு குட்டி சொர்க்கத்தையே சிருக்ஷ்டி செய்து வைத்திருந்தது.

வாரக்கடைசி நாட்களில் மக்கள் கும்பல் கும்பலாகவும், ஜோடி ஜோடியாகவும் அங்குள்ள நீரோடும் நீர்நிலைகளில் குளித்து மகிழ்வர். அக்கம் பக்கத்திலும் பிரபலமாகி நாளடைவில் வளர்ந்து வரும் ஒரு சுற்றுலா தள‌மாகவும் புகழ்பெற்றது அந்த நீர்வீழ்ச்சி. அதன்பின்னர்...!

அந்த இடத்தைக் குறித்து பயங்கரமான வதந்திகள் கால் முளைத்து உலா வரத் தொடங்கின. மர்மமான முறையில் சில இற‌ப்புகள் அங்கே நிகழ்ந்தன‌. அந்த இடம் கறுப்புப் பிரதேசம் என அங்குள்ளவர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. பலருக்கு அங்கே ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள் கதை கதையாகச் சொல்லப்பட்டன.

மக்களின் உல்லாசத்தளமாக புகழ் பெற்ற அவ்விடம் அதற்குப் பின் ஆள் அரவமற்ற பகுதியானது. விவரம் அறியா மக்கள் மட்டுமே அங்கே சென்று பொழுது போக்குவதும், பளிங்கு போன்ற‌ நீர்நிலைகளில் குளித்து மகிழ்வதும் நிகழ்ந்த‌து. உள்ளூர்வாசிகளுக்கு அவ்விடம் என்றாலே பதற்றமும் பீதியும் பற்றிக்கொன்டது. பெரியவர்கள் தங்கள் வீட்டுப்பிள்ளைகளிடம் அந்த நீர்வீழ்ச்சிப் பக்கம் போகவே கூடாது என தடை உத்தரவு பிற‌ப்பித்து வைத்திருந்தனர்.

அன்று காலை இரு பள்ளி மாண‌வர்கள் அந்த மலைக்காட்டு  நீர்வீழ்ச்சிக்கு பெற்றோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக வந்துகொன்டிருந்தனர் பள்ளிக்குப் போவதாய் பாவனை செய்துவிட்டு அந்த மலைக்காட்டுக்குள்  புகுந்திருந்தனர்.  அங்கு அவர்களுக்கு காத்திருக்கும் அபாயம் அறியாமல்..!

அவ்விருவரும் காட்டுக்குள் அலைந்து திரிந்துவிட்டு நன்பகலில் நீர்வீழ்ச்சியை அடைந்தனர். நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் கிடந்த பெரிய கற்பாறைகளில் கால் வைத்து நடந்து கொன்டே பிரவாகமெடுத்துப் பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியில் பார்வையை பதித்தனர்.

அங்கே அவர்களுக்கு முன்னே யாரோ ஒரு பெண் எதிர்ப்பக்கம் பார்த்துக்கொன்டு குளித்துக்கொன்டிருக்கும் காட்சியைக் கண்டனர்  ஒருவன் பயத்துடன் மற்றவனிடம் "டேய் அங்கே யாரோ குளிச்சிக்கிட்டு இருக்காங்கடா, அங்கே போக வேணாம், தெரிஞ்சவங்களா இருந்தா மாட்டிவிட்டிடுவாங்க என்றான் . தைரியசாலியான இன்னொருவனோ, பயப்படாதடா, இது தெரிஞ்சவங்கள்ளா இருக்காது, இங்கேதான் யாரும் வரமாட்டாங்களேடா, இது வெளியிடத்திலிருந்து வந்த யாரோவாக இருக்கும் வா கிட்டப்போயி பார்க்கலாம் என்று மற்றவனை தூண்டி அவனுடன் அழைத்துக்கொன்டு நீர்வீழ்ச்சியை நெருங்கினான்.

கதகதப்பான காலைச்சூரியனின் ஒளிக்கிரணங்களால் இள‌ஞ்சூடான நீரில் காடுகள் சூழ்ந்த மங்கிய ஒளியில் அந்த மங்கை தோள்பட்டை வரை நீரில் மூழ்கி குளித்துக் கொன்டிருந்தாள், நீரில் படர்ந்த கேசம் அவளின் சந்தண நிற முதுகுப்பகுதியை மறைத்திருந்தது.

அந்த மாண‌வர்கள் இருவருக்கும் 17 வயதிருக்கும். மீசையும் துளிர்த்திருந்தது. குளித்துக்கொன்டிருந்த பெண்ணிடம் வம்பு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ அவர்கள் வந்ததை அறவே கவனியாதது போல் இவர்கள் பக்கம் திரும்பாமலேயே எதிர்பக்கம் பார்த்து  குளித்துக்கொன்டிருந்தாள்.

இருவரும் மெல்ல நடந்து போய் அந்தப் பெண்ணுக்கு பின்புற‌ம் இருந்த பெரிய கற்பாறையில் அமர்ந்து கொன்டனர். ஒருவன் சீட்டியடித்தான், மற்றொருவன் அப்பெண்ணிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். இவன் பேச்சுக்கு பதிலாக அவள் கலகலவென சிரிக்க அது காடு முழுதும் எதிரொலித்தது. இன்னும் கொஞ்சம் தைரியம் அடைந்து "கொஞ்சம் திரும்புங்கள் உங்களைப் பார்க்கனும்" என்றான் அவர்களில் ஒருவன்.

மறுகணம் அதுவரை பெண் என நினைத்திருந்த அந்த உருவம் சரேலென்று அவர்களை நோக்கி திரும்பியது. அந்தக் காடே சிலகண‌ங்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போனது!

உயிரையே உறைய வைக்கும் கோரக் காட்சியாய் எதிரே நின்ற அந்த உருவத்தின் உச்சந்தலையிலிருந்து உடல்முழுதும் கண்கள் ! இடைவெளியில்லாத ஆயிரமாயிரம் அடர்த்தியான கண்கள் ! கோபக்கனல் தெரிக்கும் ஆவேசம் நிறைந்த செக்கச் சிவந்த கண்கள் !  வன்மம் சுமந்து நெருப்பை உமிழும் மரண‌க்கால்வாய்களாய் அந்தக் கண்கள் அவர்களின் உயிரை ஊடுருவி நின்ற‌ன‌.அகலத் திற‌ந்து அவர்களை கொலை வெறியுடன் உறுத்துப் பார்த்தன. பார்த்துக்கொன்டேயிருந்தன‌  அந்த பேய்க்கண்கள் .

அந்தக் காட்சியைக்கண்ட இருவரும் அதிர்ச்சியில் மயக்கமடையும் நிலையை அடைந்தனர்  எனினும் தாக்குப்பிடித்துக்கொன்டு அவர்களில் ஒருவன் தப்பித்து ஓட எத்தனித்து அந்த நீருக்குள்ளேயே விழுந்தான். மற்றொருவனோ நண்பன் நீருக்குள் வீழ்ந்த‌தும் அறியாது தன்னை மறந்து காட்டுக்குள் ஓடத்துவங்கினான்.

எதிரிலிருந்த மரங்கள் செடி கொடிகளில் மோதி, விழுந்து எழுந்து கண்மண் தெரியாமல், திக்குத் திசை மறந்து அவன் ஓடினான், தன்னை கொடூரக்கண்கள் கொன்ட அந்த உருவம் இன்னும் தொடர்ந்து விரட்டுவதாய் மிரண்டு வெறிபிடித்தவன்போல் ஓடிக்கொன்டேயிருந்தான் .

அன்று மாலை அந்தப் பகுதியே கலவரத்திலாழ்ந்தது, காணாமல் போன மாண‌வர்களைப் பற்றிய செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அவர்கள் அந்தக் காட்டுக்குள் போனதைக் கண்டதாக யாரோ ஒரு நபர் தெரிவித்துப் போனதையடுத்து அந்த இரு மாண‌வர்களின் குடும்பமும் பதறித்துடித்து கண்ணீரும் கம்பலையுமாக அந்தக் காட்டில் அவர்களைத்தேடி அலைந்தது.  ஊரும் உற‌வுகளும் அவர்களுடன் ஒன்றுகூடி அவர்களைத் தேடி அலைந்தன‌, மீட்புப்படையும் வந்தது.

அந்த மலைக்காடும் நீர்வீழ்ச்சியும் அங்குலம் அங்குலமாய் அலசப்பட்டது, இறுதியில் நீரில் மூழ்கி ஒருவனும், காட்டில் மூக்கிலும் வாயிலும் இரத்தம் ஒழுக இன்னொருவனும் பிண‌மாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

இன்னுமொரு கறுப்புக்கறை சுமந்து அடுத்த பலிக்கு மெளனமாய் காத்திருந்தது அந்த மலைக்காடும் ஆயிரமாயிரம் கண்கள் கொன்ட அந்த நரக‌ நீர்வீழ்ச்சியும்....!


             


@ மன்னன் (செப்டம்பர் 2015) மாத இதழில் வெளியிடப்பட்ட படைப்பு