வியாழன், 24 செப்டம்பர், 2015

ஆண்பாவம்

வணக்க‌முங்க, என் பேரு ராஜசேகர் என்ற ராஜா. சாதனையாள‌ர்கள் மத்தியில் சாமானியனான என் வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ளவே இந்த படைப்பு. பெண்பாவம் பொல்லாதுன்னு சொல்றாங்க, அப்ப ஆண் பாவமே இல்லையா? தொடர்ந்து படிங்க....

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கெடாவில் உள்ள ஓர் இரப்பர் தோட்டத்தில். உடன் பிறந்தோர் 11 பேர். நான்தான் கடைக்குட்டி, ஏகத்துக்கு செல்லம். படிப்பு ஒழுங்காய் ஏற‌வில்லை, இருந்தும் ஓரளவு படித்தேன். பெற்றோரும் உடன்பிறந்தோரும் என் போக்கிலேயே விட்டனர். பாலப்பருவம் பாகாய் இனித்தது. நண்பர்கள், ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம் என வாழ்க்கை நகர்ந்தது, படிப்பு முடிந்து, பதின்ம வயது கடந்து வாலிபனாய் வலம்

வரலானேன்.

காலப்போக்கில் நாட்டின் முன்னேற்றம் தோட்டங்களை நாகரீகம், நவீனம் எனும் பெயரில்  கபளீகரம் செய்யத்துவங்கியது. இந்தியர்களின் எதிர்காலத்தை/வாழ்வாதாரத்தை அது வெகுவாகப் பாதித்தது. சூரைத்தேங்காயாய் சிதறிய தோட்டத்து மக்கள் வாழ்வு தேடி பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

நானும் எனது குடும்பமும் அருகாமையிலிருந்த நகருக்கு குடிபெயர்ந்தோம். எனது சகோதர சகோதரிகள் அருகாமையிலிருந்த தொழிற்சாலைகளில் வேலைசெய்ய ஆரம்பித்தனர். அதன்பின்னர் ஒருவர் பின் ஒருவராய் மணமுடித்து அவரவர் இல்லற வாழ்வை ஆரம்பித்தனர்.

கட்டிளங்காளையாய் வலம் வந்து கொண்டிருந்த நானும் அருகாமையிலிருந்த சர்க்கரைத்தொழிற்சாலையில் பணிபுரிய ஆரம்பித்தேன்.
விளையாட்டுத்தனமும், வேடிக்கையும், நகைச்சுவை உண‌ர்வும் நிறைந்திருந்தாலும் கூடவே நிறைவாய் பணிபுரியும் திறமையும் எனக்கு வாய்த்திருந்தது. நல்ல பெயர், நிறைய நண்பர்கள், நல்ல வருமானம் என வாழ்க்கை மேலும் இனிக்க ஆரம்பித்தது. அங்கே என் வாழ்வின் அடுத்தக்கட்டம் அரங்கேற‌த் துவங்கியது.

நான் வேலை செய்யும் பகுதியில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ரேவதியின் வரவுதான் அதற்குக் காரணம். ரேவதி என் உள்ள‌த்தில் திருமண ஆசை எழக் காரணமானாள். நல்ல எழுமிச்சம் நிற‌த்தில், வடிவழகுடன், இலட்சணமான முகத்தோடும், இடைவரை கூந்தலோடும் மிகவும் அழகாகக்
காட்சியளித்தாள். நிறைய ஆண்களின் கண்கள் அவளை மொய்க்க அவள் கவனமோ என் மேல் இருப்பதை அவள் தோழியின் வழி அறிய வந்தபோது என் உள்ளம் உவகையில் கூத்தாடியது.

கவர்ச்சியான கருமை நிறம், களையான முகம், உயரமான தோற்ற‌ம், கம்பீரமான குரல், கூடவே நல்ல சுறுசுறுப்பும், கடுமையான உழைப்பாளியாகவும் நான் விளங்குவதாகவும் அதனால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதை அவளின் தோழியின் வாயிலாக அறிந்துகொன்டேன்.

ஒரு நாள் தனிமையில் சந்தித்து இதயத்தை இடம் மாற்றிக்கொன்ட நாங்கள் காதல் வானில் சிறகடித்துப்பறந்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். ரேவதியின் குடும்பத்தினர் முழு சம்மதத்தையும் தந்தனர்.

நான் எதிர்பார்த்தபடியே என் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. உறவினர் பெண்ணை நான் மண‌முடிக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. இருப்பினும் என் மனதைப் புரிந்துகொன்டு ரேவதியையே எனக்கு மனமுடித்துவைக்க முன்வந்தனர்.

சீரும் சிறப்புமாய் திருமணம் நடந்தேறியது, அழகுதேவதையாய் மணவறையில் ஜொலித்தாள் என் இதயராணி ரேவதி. ஆரம்பத்தில் திருமணத்திற்கு தடை சொன்னதால் என்னவோ என் பெற்றோர் எங்களுக்கு தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்துவிட்டு என் சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

ரேவதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. என்னையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாள். திருமண வாழ்க்கை கட்டிக்கரும்பாய் இனித்தது. உலகிலேயே மிகவும் அதிர்க்ஷ்டசாலியான மனிதன் நானே என அகமகிழ்ந்தேன். எல்லாம் கொஞ்சகாலமே....

அடுத்த பதிவில் நிறைவடையும்....

@"மன்னன்" மாத இதழில் வெளிவந்த‌ படைப்பு